ஆரம்பகால தமிழ் திரைப்படங்களில் இருந்து பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றின் பின்னணியில் அமைந்த கதைக்களம், கவிஞர், இசையமைப்பாளர் கைவண்ணம், இயக்குனரின் காட்சி அமைப்புத்திறன் என நயம்பட உரைக்கும் நுால். கவிநயம், கருத்துச் செறிவு, காட்சிக்கேற்ற சொல்லாட்சி அழகுற விளக்கப்பட்டுள்ளன. திரைப்பாடல்கள் சாமான்ய மனிதர் வாழ்வில் ஏற்படுத்திய சிந்தனைகளையும், வாழ்க்கை முறைகளையும் முன்வைக்கிறது. பாடல் இடம்பெற்ற படத்தின் கதைக் களத்தை விவரித்துள்ளது.இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் பெயர்கள் தந்திருப்பது சிறப்பு. கற்பனை கதைகளில் இடம் பெற்ற பாடல்கள் நேர்த்தியாக இடம்பெற்றுள்ளதை இலக்கிய நயத்துடன் விவரிக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு
-
இறைவனையே இசைய வைத்த பாடகர்களின் வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்களையும், அந்த திருப்பங்களை, அதீத பக்தி எனும் விருப்பத்தால், அவர்கள் கடந்து போன அனுபவங்களையும் விவரிக்கிறது, இந்த நூல்.கி.பி. 6ம் நூற்றாண்டில், காலடியில் வாழ்ந்த, ஆதிசங்கரரின் வாழ்க்கையோடு துவங்கி, கி.பி.,18 நூற்றாண்டில், நெல்லையில் வாழ்ந்த, ஆவுடையக்காவின் வாழ்க்கையோடு முடிகிறது.சைவ, வைஷ்ணவ ரத்தினங்கள் என்ற பகுதியில், நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடர்பான இசை செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.மொத்தம், 4.75 லட்சம் கிருதிகளை இயற்றியவர் புரந்தர தாசர்; ஸ்வர ஜதிகளின் அமைப்பாளராக இருந்தவர் சியாமா சாஸ்திரி; மேற்கத்திய வயலினை, கர்நாடக சங்கீதத்தில் புகுத்தியவர் முத்துஸ்வாமி தீட்சிதர்; தினமும் 1.20 லட்சம் ராமநாமங்கள் ஜெபித்தவர், சரபோஜி மன்னரையே உதாசீனப்படுத்தியவர் தியாகராஜ சுவாமிகள், 12 ஆண்டுகள், கோல்கொண்டா சிறையில் வாடியவர் பத்ராசல ராமதாசர், அலமேலு மங்கையிடம் உணவருந்தியவர் அன்னமாச்சார்யா, வஞ்சப் புகழ்ச்சியால் இறைவனை அணுகியவர் மாரிமுத்தாப் பிள்ளை... என, சங்கீத ரத்தினங்களின் இசைக் குறிப்புகளோடு சேர்த்து, வாழ்க்கை குறிப்புகளை படிக்கும் போது, நிறைவு ஏற்படுகிறது.‘உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பாலயம்’, என, யோகவழி சொன்ன திருமூலர் துவங்கி, ‘தாயோடு அறுசுவை போம்... பொன் தாலியோடு எவையும் போம்’ என, உலகின் நிலையாமை சொல்லும் அவ்வையாரின் பாடல் திறத்தை பாராட்டி, வாழ்வின் சூழலியல் பாடல்களை, யோக ரத்தினங்கள் பகுதியில் குறிப்பிட்டது, மிக முக்கியமானது.பாடல்களை பற்றியது மட்டுமல்ல, பாடகர்களை பற்றியதும் தான், இந்த நூல்.– நடுவூர் சிவா
-
இசை மேதைகள் என்னும் தலைப்பில் அமைந்துள்ள இந்த நூல், தமிழகத்தின் தலைசிறந்த கர்நாடக சங்கீத கலைஞர்களைப் பற்றிய அபூர்வக் களஞ்சியமாகத் திகழ்கிறது. கி.பி.,19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த, இசை கலைஞர்கள் சிலரது வாழ்க்கைக் குறிப்புகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.நூலாசிரியர், தா.சங்கரன், வீணை தனம்மாளின் பேரன். ஒரு சிறந்த இசை பாரம்பரியத்திலிருந்து வந்துள்ள ஆசிரியர், கர்நாடக சங்கீதத்தில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்துள்ளது, பொருத்தமானதே. டைகர் வரதாச்சாரியார், இலுப்பூர் பஞ்சாபகேச பிள்ளை, எஸ்.ஜி.கிட்டப்பா, தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கொன்னக்கோல் பக்கிரியா பிள்ளை, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, வீணை தனம்மாள், பெங்களூர் நாகரத்தினம்மாள், மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை போன்ற, 17 தலைசிறந்த கலைஞர்களின் வாழ்க்கை குறிப்பு, அவர்களது இசையின் மேன்மை பற்றிய செய்திகள், எளிய நடையில் விரிவாகவும் சுவாரசியமாகவும் விளக்கப்பட்டுள்ளன.வெறும் பெயர் அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் இக்கால இசை சமூகத்தினர்க்கும் இசை பயிலும் மாணவர்களுக்கும், இசை ஆர்வலர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயன் உள்ளதாக அமையும்.– சுபஸ்ரீ ஹரி
-
கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவருக்கும், காலத்தால் பெரிதும் முற்பட்டவர்களான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகிய மூவரை, ‘கர்நாடக சங்கீதத்தின் ஆதி மும்மூர்த்திகள்’ என்று குறிப்பிடுவர்.இம்மூவரும் சீர்காழி, சிதம்பரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்ததால் சீர்காழி மூவர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த நூலில், முத்துத்தாண்டவர் இயற்றிய, 60 பாடல்களும், மாரிமுத்தாப் பிள்ளை இயற்றிய, 25 பாடல்களும், அருணாசலக் கவிராயர் இயற்றிய, 61 பாடல்களும், மரபு முறை மாறாத இசையமைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.நூலாசிரியர், திருப்பாம்புரம், சோ. சண்முகசுந்தரம், அனைத்து பாடல்களுக்கும் சுரக்குறிப்பும் விளக்க உரையும், எளிதாக பயிலும் முறையில் கொடுத்துள்ளார்.கையாள்வதற்கு எளிதாக, 146 பாடல்களும் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளிலும், மூவரது பாடல்களும் இடம்பெறுகின்றன.முதல் தொகுதியில் முத்துத்தாண்டவர் வாழ்க்கை வரலாறும், 2ம் தொகுதியில் மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் உள்ளன. பண்ணாராய்ச்சிக் குழு கண்டறிந்த பண்களுக்கு இணையான ராகங்களும், அவற்றின் ஏறு நிரல், இறங்கு நிரல் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூல், சென்னை ராயப்பேட்டை, கர்னாடிக் மியூசிக் புக் சென்டரில் கிடைக்கிறது.– விஜயலட்சுமி சிவகுமார்
-
இசை ரசிகருக்கு மிகவும் பிடித்தது, கீர்த்தனைகளும், கிருதிகளுமா அல்லது கற்பனையாக ஊற்றெடுக்கும் ஆலாபனைகளும், நிரவல்களும், ஸ்வரங்களுமா?எடுத்த எடுப்பிலேயே, கீர்த்தனைகளும், கிருதிகளும் தான் எனப் போட்டுடைக்கிறார், வித்யா பவானி சுரேஷ். இவர், சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல; கர்நாடக இசையில் ஆழ்ந்த அறிவு உள்ளவர்; அதையும் தாண்டி, சிறந்த எழுத்தாளர் என்பதை, இந்த புத்தகத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். ராகத்தின் அமைப்பு, தாளத்தின் அமைப்பு, கீர்த்தனைகளின் அமைப்பை விளக்கும் ஆசிரியர், 50 ராகங்களை, அவை, தாய் ராகமா, தாய் ராகத்திலிருந்து பிறந்த ராகமா என்பதைச் சொல்லி விட்டு, அதன் தன்மையையும் விளக்குகிறார். அந்த ராகத்தில் எழுதப்பட்டுள்ள பிரபல கீர்த்தனைகளைக் கூறி, அவை, எப்படி நடனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விளக்குகிறார்.ராகத்தைப் பற்றி குறிப்பு எழுதும்போதும், அந்தந்த பக்கங்களுக்கு, ராகத்தின் தன்மைக்கேற்ற நிறங்களையும் கொடுத்து, படிப்பவர்களுக்கு சலிக்காமல் இருக்க, சங்கீதம் சார்ந்த சில துணுக்குத் தகவல்கள், போட்டிகளையும் வைத்து உள்ளார்.கர்நாடக சங்கீதத்தை பால பாடமாகப் படிப்போருக்கும், சங்கீதத்தில் தேர்வு எழுதுவோருக்கும் மிகவும் பயனுள்ள நூல்.பானுமதி
-
‘வர்ணசாகரம்’ என்னும் பெயருக்கேற்றாற்போல் இந்த நூல், வர்ணங்களின் கடலாகத் திகழ்கிறது. இந்த தொகுப்பில், 216 ஆதிதாள தான வர்ணங்கள், 74 அட தாள தான வர்ணங்கள், ஏனைய தாளங்களில் அமைந்த, 23 தான வர்ணங்கள், ஆறு ராகமாலிகை வர்ணங்கள், ஏழு தரு வர்ணங்கள், 89 பத வர்ணங்கள் மற்றும் சவுகவர்ணங்கள் என, மொத்தம், 415 வர்ணங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தொகுத்தவர், சங்கீத கலாநிதி, டி.கே.கோவிந்த ராவ். கி.பி., 17ம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை, இசை வாணர்கள் பலர் இயற்றிய வர்ணங்கள், இந்த நூலில் ஒரு சேரக் கிடைக்கின்றன. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில், ௭௦க்கும் மேற்பட்ட இசைவாணர்கள் இயற்றிய வர்ணங்கள், தெளிவான சுர, தாளக் குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. நூலின் முகவுரை பக்கங்களில், இந்த வர்ணங்களை இயற்றிய இசைவாணர்களின் காலம் மற்றும் அவர்கள் வாழ்ந்த நூற்றாண்டு உள்ளிட்ட செய்திகளை, தொகுப்பாசிரியர், பட்டியலிட்டுள்ளார். பல்வேறு ராகங்களிலும் தாளங்களிலும் அமைந்துள்ள இந்த வர்ணங்களின் தொகுப்பு, இசைக் கலைஞர்களுக்கும், இசை பயிலும் மாணவர்களுக்கும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.அக்கரை சுபஸ்ரீ ஹரி
-
இந்த நூல், கர்நாடக, இந்துஸ்தானி, பண் இசையின் இலக்கணத்தை விவரிக்கிறது. கோவிந்த தீட்சிதர், வேங்கடமகி இருவரின் மேளகர்த்தா முறையில் ராகப் பெயர்களும், அவற்றின் ஜன்ய ராகங்களும், ஆரோகண, அவரோகண வரிசைகளும், இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன.கர்நாடக, இந்துஸ்தானி இசையின் சமஸ்வரஸ்தான ராகங்கள், தமிழ்ப் பண்களுக்கு இணையான ராகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 103 பண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘நமது பாரம்பரிய இசை’ என்ற தலைப்பில், தொகுப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை, இரண்டாயிரம் ஆண்டு கால இசையின் வரலாற்றை சுருங்கச் சொல்கிறது. அது தகவலாக மட்டுமல்லாமல், ஆய்வாகவும் அமைந்துள்ளது.தமிழிசை இயக்கம் தோன்றிய பின்னணி, வரலாற்று ரீதியில், பல நூற்றாண்டுகளாக இலக்கியம், இசை போன்றவற்றில் வடபகுதி, தென்பகுதி மக்களிடையே தொடர்ந்து நடந்த பல பரிமாற்றங்கள் அதனால், இசையில் பொதுத்தன்மை உருவாகியது ஆகியவற்றையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. இசையில் ஆர்வம் உள்ளவர்கள், ஆய்வு மாணவர்கள், படிக்க வேண்டிய புத்தகம்.அ.ப.இராசா
-
போர்க்களத்தில், வீர முழக்கமிடும் ஒன்பது நாடோடிப் பாடல்களை ஆய்கிறது நூல். இரவிக்குட்டிப் பிள்ளைப் போர், கான் சாகிபு சண்டை, தம்பிமார் கதை, இராமப்பய்யன் அம்மானை ஆகிய நான்கும், தமிழகத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னால் எழுந்த வீர நிகழ்ச்சி போர் பாடல்கள். காசீம் படைப்போர், அலியார் படைப்போர், சைத்தூன் கிஸ்ஸா, சக்கூன் படைப்போர், மலுக்கு முலுக்கு ராஜன் கதை ஆகிய ஐந்தும் முஸ்லிம் பெயர் பூண்ட போர் பாடல்கள். வீரச்சுவை எல்லாவற்றிலும் விரவிக் கிடக்கின்றன. ‘எழு கடலுக்கு அப்புறத்தே இரும்பு அறைக்குள் இருந்தாலும், எம தூதருடன் ஆள் வந்தால் இல்லை என்றால் போவாரோ?’ மரணத்தை விமர்சிக்கும் மதிப்பான பாடலிது. போரிலும், சாவிலும் தமிழர் காட்டிய வீரம், பாடல்களில் பதிவாகி உள்ளது. ‘ஆலம் விழுது போல் அந்தப் புள்ளை தலைமயிரு தூக்கி முடிஞ்சால் என்ன தூக்கணத்தின் கூடுபோல?’ ஆலம் விழுது போன்று தொங்கும் கூந்தலை, தூக்கணாங்குருவிக் கூடு போல் கட்டச் சொல்லும் உவமை மிகவும் நயமானது.பழமொழி, உவமைகள், நாட்டுப்புற இலக்கியத்திலும் நிரம்பிக் கிடக்கின்றன. வீரத்தில் வெளிப்படும் சோகத்தையும், இனிய நாட்டுப்புறப் பாட்டாக, நயமுடன் ஆய்வு செய்கிறது இந்த நூல்.– முனைவர் மா.கி.ரமணன்
-
மாறிவரும் நம் வாழ்க்கை முறையில், நாம் இழந்து வரும், அரிய பொக்கிஷங்கள் பல. அவற்றில் முதலாவதாக நாட்டுப்புறப் பாடல்களைச் சொல்லலாம். நாட்டுப்புறப் பாடல்கள், நம் மண்ணின் ஆன்மா. உழைக்கும் மக்களின் கலை வடிவம். கலை, மக்களிடம் இருந்தே பிறக்கும் என்பதற்கான ஆதாரம், நாட்டுப்புறப் பாடல்கள் தான். ஒவ்வொரு ஊர் மண்ணுக்கும், ஒரு குணம் உண்டு என்று சொல்வர். அதை போலவே, ஒவ்வொரு ஊருணி தண்ணீருக்கும் ஒரு சுவை உண்டு. மண்ணில் பிறந்து, மண்ணில் ஊறும் தண்ணீர் குடித்து வாழும் மனிதனுக்கும், நிச்சயம் ஒவ்வொரு குணம் இருக்கும். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குணம் கொண்டது. இங்குள்ள, மக்களின் வட்டார வழக்கும், உணவு முறையும், கும்பிடும் சாமியும், கும்பிடும் முறையும் வேறுவேறு. இந்த வேறுபாடு, பொதுத்தளத்தில் வரக்கூடிய இலக்கிய படைப்புகளில் மிக நுட்பமாக காணப்படுவதில்லை. நாட்டுப்புறப் பாடல்களில்தான், அவை, உரித்த வேர்க்கடலை போல், பளிச்சென தெரியும்.ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள, நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தாலே, நம் மண்ணின் பல்வகையான வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள முடியும். அந்த முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது, மிக அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. காரணம், நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும் கடைசி தலைமுறை மனிதர்கள், வெகுசிலர் தான், நம்மிடையே இருக்கின்றனர். அவர்களுக்குப் பின், நாம் யாரிடம் சென்று பாடல்களை கேட்பது? நம் பாரம்பரிய தொழில்களே நடக்காதபோது, மக்கள் எங்கு போய் பாடப்போகின்றனர்?இந்தக் கவலையைப் போக்கும் விதத்தில், சமீபத்தில், நான் ஒரு புத்தகத்தை படித்தேன். ‘கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புறப் பாடல்கள்’ என்ற அந்த நூலை, இரா.மனோகரன் தொகுத்துள்ளார். காவ்யா பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. ஏறக்குறைய 1,100 பக்கங்கள். தாலாட்டுப் பாடல், தெம்மாங்குப் பாடல், கும்மிப் பாடல் போன்ற பாடல்களோடு, அந்த பகுதியின் வள்ளி, முத்திருளாயி போன்ற சிறுதெய்வங்களின் மீது, பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களும், தொகுப்பில் உள்ளன.வேளாண்மைத் துறையில் பணி செய்யும் நூலாசிரியர், தன் பணிநிமித்தமாக செல்லும் பகுதிகளில் சந்தித்த மனிதர்களிடம் இருந்து, பலகாலங்களாக சேகரித்துத் தொகுத்துள்ளார். யாரிடம் இருந்து பாடல் கேட்டு எழுதப்பட்டது என்ற குறிப்பையும் கொடுத்துள்ளார். பாடல்களில் வெளிப்படும் மக்களின் உணர்வுகளும், பாடல்களில் இழையோடும் அழகுணர்ச்சியும், நகைச்சுவையும், கேலியும், கிண்டலும், படிக்க படிக்க இன்பம் தருபவை.தமிழகத்தில், அரசியல் வரலாறும் இலக்கிய வரலாறும் எழுதப்பட்ட அளவிற்குக்கூட, நாட்டுப்புறப் பாடல்களின் வரலாறு எழுதப்படவில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில், ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியை, மனோகரன் துணிந்து, தனிநபராக செய்து காட்டியுள்ளார்.– டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப.,
-
பாட்டு ஆயுதம் ஏந்தி போராளிகளாக மாறி, பாரத விடுதலைக்கு பாடுபட்டோர் அநேகர். அத்தகு அரும் பணியால் சிறந்து ஒளிரும் புகழ்மிக்க மகாகவி பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ஜீவா, விசுவநாத தாஸ், பாஸ்கர தாஸ், கே.பி.சுந்தராம்பாள் போன்ற பெருமக்களின் போராட்டச் செய்திகளோடு, அவர்தம் வாழ்க்கைச் சரித நிகழ்வுகள் பலவற்றையும் சேர்த்து தொகுத்து எழுதியுள்ளார் முனைவர் சொ.சேதுபதி.ஆழ்ந்த தமிழ்ப் புலமைமிக்க அறிஞர் என்பதால், ஒவ்வொருவர் பற்றியும், அவர் நுண்மாண் நுழைபுல ஆய்வுகளோடு செய்திகளை திரட்டி தந்துள்ளார். முதல் கட்டுரையே, வடலூர் ராமலிங்க வள்ளலார், ‘கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக’ என்று முழக்கமிட்டதை விவரிக்கிறது.‘மனுமுறை கண்ட வாசகம்’ வள்ளலாரின் சமகால அரசியல், சமுதாய வாழ்வியல் சாசனமாக ஒளிர்வதைச் சுட்டிக் காட்டுகிறார். பாரதியின், ‘வந்தே மாதரம்’ பிறந்த கதை, திருமண வீட்டில் இளைஞர் கனக சுப்புரத்தினம், பாரதி முன்னால் அவர் பாடிய, ‘வீரசுதந்திரம் வேண்டி நின்றார்’ பாடலைப் பாடி, அறிமுகமாகி, பாரதிதாசனான சூழல், குவளைக் கண்ணனின் தாய் பாதியிடம் சுப்ரபாதம் பாடு என்றதும், ‘பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி’ பாடலைப் பாடிய விதம் ஆகியவை நெஞ்சம் நெகிழ்ந்து, நெக்குருக வைக்கும் அருமையான ஆவணப் படப்பிடிப்பாக மிளிர்கிறது.பெயர் அறியப்படாத பெருங்கவிகள், கூத்துக் கலைஞர்கள் சிலரின் பாட்டுப் போரையும், நூலில் இடம்பெறச் செய்துள்ளார். வேளாண் விழிப்புணர்வு போராளி நம்மாழ்வார் பற்றிய அரிய செய்திகளும், இதுவரை எவரும் அறியாதவை தான். ‘குறுகத் தரித்தல்’ என்பது போன்று, விரிக்கிற் பெருகும் வீரவரலாறாக, ஒவ்வொரு கட்டுரையும் திகழ்கிறது.கவுதம நீலாம்பரன்
-
இளையராஜா இசையின் சிறப்பை பேசும் உன்னத நூல். வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்நாடக இசை வர்ண மெட்டுகளை போல் மக்களிடம் நாட்டுப்புற இசை வர்ண மெட்டுக்கள் ஏராளமாக உண்டு. அவைகளை தேடித் தேடி கவனத்துடன் மனதில் வாங்கிப் பதிவு செய்து கொண்ட ஞானியரில் மகா ஞானி நம்முடைய இளையராஜா அவர்கள் என்பது கி.ராஜ நாராயணனின் கணிப்பு. ஆனால், இளையராஜாவோ அடக்கத்துடன் பேசுகிறார்.‘இசை என்பது மிகப்பெரிய ஆற்றல். அதில் நான் செய்ய முடிவது கொஞ்சம் தான். எனக்கு விதிக்கப்பட்ட கால அளவிற்குள் பார்க்க முடிவது கொஞ்சம் தான். பார்க்க முடியாதது எவ்வளவோ அதை வெளிப்படுத்த இறைவன் தான் மனம் வைக்க வேண்டும். முனைப்பாக இதில் இறங்கி, அனைத்தையும் செய்து விட முடியும் என்று தோன்றவில்லை. என் மூலமாக கொஞ்சம் வெளிப்படுகிறது.(பக்.,70) இளையராஜாவின் இசை இரண்டு தலை முறைகளை கடந்து இப்போது மூன்றாவது தலைமுறையினரிடம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இசை ஒரு தத்துவம், அது ஒரு கலாசாரம், ஒரு காலத்தின் வரலாறு என்று இந்த உன்னத நூல் அறிவிக்கிறது. இசைத்தமிழ்ப் பொக்கிஷம்!எஸ்.குரு
-
அரசனே ஆனாலும் இயற்கையை வெல்ல முடியாது என்பதை அறியாமல், காம இச்சைக்காக தன் மகனை பலி கொடுத்த அறிவிலியை பற்றி நாடக வடிவில் கூறுகிறது இந்நூல்.
-
தமிழகத்தில் பொதுவாக உரைநடையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளே மிகுதி. இந்நூலாசிரியர், அரிதின் முயன்று தேடித் தொகுத்த கல்வெட்டுப் பாடல்களோடு, முன்னமே கண்டெடுத்து வெளியிடப் பெற்ற பாடல் கல்வெட்டுகளையும், ஒரு சேரத் தொகுத்துள்ளார். நாட்டு வரலாறு எழுதுவோர் கல்வெட்டுப் பாடல்கள் தரும் செய்திகளை, தாம் எழுதும் நூல்களில் சேர்க்காதது பெரும் குறையே என்ற ஆதங்கத்தை, முன்னுரையில் வெளிப்படுத்தியிருப்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.பாடல் கல்வெட்டுகள் பெரும்பான்மை அறச்செயல்களுக்கே முதலிடம் தந்துள்ளன. தமிழைப் பல்வேறு அடைமொழிகளில் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர், கல்வெட்டுகளில் வடமொழிப் பகுதியும் இடம் பெற்றிருப்பதை எடுத்துக்காட்டுகிறார். (குறிப்பாகத் திருவண்ணாமலைக் கோவிலில் உள்ள எல்லப்ப நயினார் பற்றிய கல்வெட்டு) வரலாற்றுச் செய்திகள் மட்டும் அல்லாமல், சிலரது வாழ்க்கைச் செய்திகளும் பாடல் கல்வெட்டில் இடம் பெறுவது உண்டு. வேதநாயக சாஸ்திரியார் கல்லறையில் அமைந்துள்ள பாடல் அப்படிப்பட்டது.பழமங்கலம் நடுகல் பாடல் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிடுகையில், தென்னகத்தில் காணப்பெறும் நடுகற்களில், இது ஒன்றே பாடல் வடிவில் அமைந்தது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். தில்லைக்கோவிலில் பொன் வேய்ந்தது, மன்னன் மகளை மணந்தமை, எடைக்கு எடை பொன் தானம் அளித்தமை, குளம் அமைத்தமை, கோவில் சுற்றுச்சுவர் மற்றும் மதில் அமைத்தமை, செய்த அறத்தைப் பாதுகாக்க வற்புறுத்தப்பட்டமை, நந்தா விளக்களித்தல், கோவில் திருப்பணி, நிலக்கொடை முதலிய செய்திகளைத் தெரிவித்திருப்பதைப் பெரும்பாலான பாடல் கல்வெட்டுகளில் காணலாம்.சென்னையில், ௧8௧8ல் பஞ்சம் வந்தபோது, எல்லீசு துரை, ராயப்பேட்டையில் கிணறு வெட்டிய செய்தி, பாடலாக அவர் எழுதிய பாடல் கல்வெட்டும், உணவில் கலக்கப்பட்ட நஞ்சால், அவர் உயிரிழந்த செய்தியும், ஒரு பாடல் கல்வெட்டால் அறியப்படும் தகவல், இந்நூலில், பதிவாக இருப்பது எண்ணுதற்குரியது (பக்.57–58). இந்நூலாசிரியர் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடுடையவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், இந்நூல் அமைந்துள்ளது. வரலாற்றுணர்வுடையோர் போற்ற வேண்டிய நூலாகத் திகழ்கிறது.ராம. குருநாதன்
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்