Advertisement

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் (இரண்டு பாகங்கள்)

1

திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் (இரண்டு பாகங்கள்)

₹ 1,400

எழுத்துரு அளவு:

திருக்குறளுக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர்களில், பரிமேலழகரே மிகுந்த சிறப்புடையவர் என்பது, அவரைத் திட்டுகின்றவர்களும் சேர்ந்து சொல்லுகின்ற முடிபாகும். ‘வடநூல் துறையும் தென்திசைத் தமிழும் விதிமுறை பயின்ற நெறியறி புலவன்’ எனப் பாராட்டப் பெறுபவர் அவர். மூலநூலாசிரியராகிய திருவள்ளுவரோடு சேர்த்து வைத்துக் கொண்டாடும் அளவுக்குச் சிறப்புப் பெற்றவர்.கடந்த, 19ம் நூற்றாண்டு வரை இவ்வாறு பாராட்டும் புகழும் பெற்று விளங்கிய பரிமேலழகர், 20ம் நூற்றாண்டு இருபதுகள் தொடங்கி, பல்வேறு நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுப் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் உள்ளாகி வருகிறார்.திருக்குறள் உரையுலகில், பரிமேலழகரை இவ்வாறு அடையாளப்படுத்தும் இன்றையச் சூழலில், அவரை திருவள்ளுவரோடு ஒப்பவைத்து தெய்வமாகப் போற்றும் மகாவித்துவான் கோ.வடிவேலு செட்டியாரின் பரிமேலழகர் உரைக்கான தெளிபொருள் விளக்கம், கருத்துரை, குறிப்புரை ஆகியவற்றை, லாபநோக்கு இல்லாமல், துணிந்து மிகுந்த பொருட்செலவில் மிக நேரிய முறையில், அழகாக இரண்டு பாகங்களாக வெளியிட்டு வழங்கியுள்ள, சிவாலயம் ஜெ.மோகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.பரிமேலழகரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பவர்கட்கு இந்தப் பதிப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்பதில் ஐயமில்லை. பரிமேலழகர் உரை தருக்கம், இலக்கணம், சாங்கியம், யோகம், வேதாந்தம், தருமசாஸ்திரம், வடமொழி நூல்கள், தமிழ் நூல்கள் ஆகியவற்றின் கருத்துக்களைக் கொண்டு விளங்குகின்றது. இவற்றின் செய்தி அறிந்தார்க்கே பரிமேலழகர் உரை புரியும். செட்டியார், தமது உரைக்கு ஏறக்குறைய, 95 நூல்களைச் சான்றாகக் கொண்டு உள்ளார். மநுநீதியை, 31 இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். இவர்காட்டும் நூற்பரப்பு, நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. இவற்றையெல்லாம் அறிந்திருந்த காரணத்தால் தான், இவரால் பரிமேலழகரைப் புரிந்து கொண்டு, உரை சொல்ல முடிந்தது எனலாம். செட்டியார்தம் நூலில் திருக்குறளுக்குப் பரிமேலழகர் நல்கிய உரைக்குத் தெளிவான பொருள் விளக்கம் உள்ளது; கருத்துரை உள்ளது; பரிமேலழகர் உரையில் எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் நுண்பொருள்களுக்குக் குறிப்புரை என்ற வகையில் சிறந்த விளக்கம் உள்ளது; பரிமேலழகர் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்களுக்கு உரை உள்ளது; செட்டியார் தாமே காட்டும் செய்யுள்களும் உள்ளன; பரிமேலழகர் தமக்கே உரிய வகையில் தந்த இலக்கணக் குறிப்புகட்கு விளக்கம் உள்ளது; பலசமயக் கோட்பாடுகள் பற்றிய விளக்கம் உள்ளது; மேற்கோள் காட்டப்பட்டுள்ள செய்யுட்களின் நூற்பெயர்கள் உள்ளன; பாடவேறுபாடுகள் எடுத்துக் காட்டப்பட்டுத் தக்க பாடம் இது எனச் சொல்லப்பட்டுள்ளது; பரிமேலழகர் கூறும் மறுப்புகள் குறித்த விளக்கமும் தரப்பட்டுள்ளது. இதுபற்றியே டாக்டர் மு.வரதராசனார், ‘மணக்குடவர், பரிமேலழகர் முதலானவர்களுடன் சேர்த்துப் போற்றத் தக்க பெருமை உடையவர் பேராசிரியர் கோ.வடிவேலு செட்டியார்’ எனக் குறிப்பிடுகின்றார். குறளுக்கான உரையையும் (பொருளையும்) அந்தக் குறளுக்கான விசேட உரையையும் (விளக்கம்), பரிமேலழகர், பொழிப்புரையாகவும் தொடர்களாகவும் எழுதிச் செல்கிறார்.சான்றுக்கு ஒரு குறள்: (பக்: 83, 84, 85)செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார் (26)இந்தக் குறளுக்கான பரிமேலழகரின் பொழிப்புரை: ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கெளியவற்றைச் செய்யாது, அரியவற்றைச் செய்வார் பெரியர், அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர். பரிமேலழகரின் நீண்ட தொடர்களாகிய இந்தப் பொழிப்பைப் பதங்களாகப் பிரித்து, நாம் புரிந்து கொள்ளும்படி எளிமையான சொற்களைக் கொண்டு தெளிய வைக்கிறார் செட்டியார். இதனையே தெளிபொருள் விளக்கம் எனச் செட்டியார் குறிப்பிடுகிறார். எப்படி என்பதைப் பார்ப்போம்.(ஒத்த பிறப்பினராகிய மனிதர்களுள்) பெரியர் – பெரியோர், செயற்கரிய – (செய்வதற்கு எளிமையானவற்றைச் செய்யாமல்) செய்வதற்கு அருமையானவற்றை, செய்வார் – செய்வர், சிறியர் – சிறியோர், செயற்கரிய (அவ்வெளிமையானவற்றைச் செய்து) செய்வதற்கு அருமையானவற்றை, செய்கலாதார் – செய்யமாட்டாதார்.இவ்வாறு செட்டியார் பதவுரை சொல்கிறார். குறளுக்கான பதங்கட்கு (சொற்கட்கு) பொருள் சொல்லாமல், பரிமேலழகரின் பொழிப்பில் உள்ள பதங்கட்குப் பொருள் சொல்வதே, செட்டியார் பணி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தக் குறளுக்குரிய பரிமேலழகரின் விசேட உரை: செய்தற்கெளியவாவன – மனம் வேண்டியவாறே அதனைப் பொறிவழிகளாற் புலன்களில் செலுத்தலும் வெஃகலும் வெகுடலும் முதலாயின. செயற்கரியவாவன – இயம நியம முதலாய எண்வகை யோகவுறுப்புக்கள். நீர்பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கிற்றாபத பக்கமென்பாரும் உளர். அவை நியமத்துள்ளே அடங்கலின் நீத்தாரது பெருமைக்கேலாமை அறிக.இதற்குச் செட்டியாரின் தெளிவுரை: செய்தற்கெளிமையாவன – மனம் விரும்பிய படியே அதனை (கண் முதலிய) இந்திரிய வாயிலாக விடயங்களில் செலுத்தலும் விரும்புதலும் கோபித்தலும் முதலியனவாம். செய்தற்கருமையாவன – இயமம் நியமம் முதலான யோகங்களாம்.பரிமேலழகரின் பொழிப்புரையிலும் விசேடவுரையிலும் சொல்லப்படும் செய்தி களில், நமக்கு விளங்காதவற்றை எடுத்து விளக்கமாகச் சொல்லும் பகுதியைக் குறிப்புரை எனச் செட்டியார் குறிப்பிடுகிறார். நியாயமாக இந்தக் குறிப்புரையைத் தான் ‘தெளிபொருள் விளக்கம்’ எனச் சொல்ல வேண்டும். செட்டியாரின் பரந்துபட்ட நூலறிவும், நுண்மாண் நுழைபுலமும், இந்தக் குறிப்புரையில் தான் விளங்கித் தோன்றுகின்றன.இந்தக் குறளின் விசேடவுரையில், எண்வகை யோக உறுப்புக்கள் பற்றிப் பரிமேலழகர் குறிப்பிடுகிறார். இவை பற்றித் தம் குறிப்புரையில், ‘எண் வகை யோகவுறுப்புக்கள் – யோகத்திற்குரிய எண்வகை அங்கங்கள். அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பன’ என எழுதி, இந்த எட்டையும் மிக விளக்கமாக செட்டியார் எழுதியுள்ளார். மேலும், ‘இவற்றின் விரிவை அடயோகப் பிரதீபிகை முதலியவற்றிற் காண்க’ எனச் செட்டியார் குறிப்பிடுவதில் இருந்து, யோகநூல்களைச் செட்டியார் படித்து தெளிந்தவர் என்பது தெளிவாகிறது.மேலும், பரிமேலழகர் தமது விசேடவுரையில், ‘நீர்பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கின் தாபதபக்கம் என்பாரும் உளர்’ என எழுதியுள்ளார். இது பலருக்குப் புரியாத பகுதி. இதனை செட்டியார், ‘நீர்பலகால் மூழ்கல் முதலாய நாலிருவழக்கின் தாபதபக்கம் என்பதற்கு நீரின்கண் பலமுறை மூழ்கலும், வெறுநிலத்து உறங்கலும், மான்தோலை ஆடையாகத் தரித்தலும், சடை தரித்தலும், எரியோம்புதலும், ஊரடையாமையும், கானகத்துண்டலும், கடவுளைப் போற்றலும் என்னும் எண்வகை மார்க்கத்துத் தவம்புரியும் கூறு என்று கொள்க’ என விளக்கியதுடன், இதுதொடர்பான புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியுள்ள பாடலையும் எடுத்துக்காட்டியுள்ளார்.மேலும், ‘அவை நியமத்துள்ளே அடங்கலின் நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக’ எனப் பரிமேலழகர் தம் விசேடவுரையில் சொல்லியுள்ள மறுப்பினை விளக்க, ‘நியமம் – தவம், சவுசம் (உடலை நீரினாலும் மனதைச் சத்தியத்தினாலும் தூய்மையாக்கல்) தத்துவ நூலாராய்ச்சி, பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வ வழிபாடு என்னும் ஐந்துமாம்’ என எழுதி, அந்த எட்டும் நியமத்துள்ளே அடங்குவதைக் குறிப்பிட்டு விளக்குகிறார்.இப்படியாகப் பலவகையிலும் பரிமேலழகரை புரிந்து கொள்ள உதவும் செட்டியார் உரையும், சில இடங்களில் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது என்பதும் உண்மையே. அந்தந்த இடத்திற்கான தக்க கல்வி உடையார்க்கே அதுவிளங்கும். ஆனால், இக்காலத்தில் அத்தகையக் கல்வி இல்லையே! தருக்கம், யோகம், மீமாம்சம், சாங்கியம், தருமசாஸ்திரம் முதலானவற்றைத் தமிழ் படிப்போர், படிப்பதில்லை; பாடத்திட்டத்திலும் அவை இல்லை; தனியாகச் சென்று படிப்பதற்கும் இடமில்லை. இத்தகையக் கல்வி இல்லாததால், செட்டியார் உரையும் சில இடங்களில் புரியாமல் போகிறது.ஐம்பது ஆண்டுகட்கு முன்பு, புலவர் கல்லூரி மாணவர்கட்கு நான் பரிமேலழகரைப் பாடம் சொல்லிய காலத்தில், நமது செட்டியார் உரையே கலங்கரை விளக்குப்போல நின்று எனக்கு வழிகாட்டியது. அவர் உரை கிடைக்காத காலத்தில் நான் பட்டபாடு எனக்குத் தான் தெரியும். உரை கிடைத்தபின்பு, நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அப்போது மானசீகமாக நான் செட்டியாருக்குச் செலுத்திய நன்றிக்கு அளவில்லை.செட்டியார் அவர்களின் தலைமாணவராகவும், முதல் மாணவராகவும் விளங்கிய பல்கலைச் செல்வர் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, செட்டியார் உரையின் அறத்துப்பாலை வெளியிட்டார். அவருக்கு முன்பாக, 1904 மற்றும் 1919ம் ஆண்டுகளில் இரு பதிப்புகளைக் கண்டுள்ளது இந்த நூல்.தற்போது சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் மூன்று பால்களையும் பிழையேதும் இல்லாமல், குறை சொல்ல முடியாத அளவில் அச்சிலும் அமைப்பிலும் அழகூட்டி, திருவள்ளுவரின் உருவப்படத்தையும் அட்டையில் அமைத்து அருமையாக வெளியிட்டுள்ளார். தொடர்புக்கு: samithiagarajan08@gmail.com– பேரா.சாமி.தியாகராசன்

ipaper

வாசகர்கள் கருத்துகள் (1)

MV
SUNITHAVEL மார் 06, 2025

Where I will get this புக்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • பாவை பப்ளிகேஷன் (பி) லிட்., 142, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் தூண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நூல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95). ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.

  • தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60). ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். "சொல்லதெழுதல்' என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது' என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நூல் ஒரு விருந்து.

  • ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.) தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.

  • ஐந்திணைப் பதிப்பகம், 279 பாரதி சாலை, சென்னை-5. (பக் கம்:152 விலை: ரூ.70.) சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நூல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!

  • நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50). மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!

  • திலகம் பதிப்பகம், 17இ, பி-1 கே.கே.பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (பக்கம்:191. விலை:ரூ.85) பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப் பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.

  • பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை- 600 108 போன்: 044 2527 0795; 3253 0516; 2523 4576; மின் அஞ்சல்: paarinilayam@yahoo.co.in

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

  • வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.

புதிய வெளியீடுகள்