‘கர்ணனின் கவசம், சகுனியின் தாயம்’ என்ற இரு நாவல்கள் மூலம், அறியப்பட்டவர், கே.என்.சிவராமன். ‘தினகரன்’ நாளிதழின் இணைப்பிதழ்களின் முதன்மை ஆசிரியரான அவர் எழுதி, ‘சூரியன் பதிப்பகம்’ விரைவில் வெளியிட உள்ள, ‘மாபியா ராணிகள்’ என்ற நூலில் இருந்து சில பகுதிகள்: எந்த நொடியில், ‘‘கங்கு என் தங்கச்சிடா...’’ என்று கரீம் லாலா கர்ஜித்தாரோ, அந்த வினாடியில், காமாத்திபுராவின் தலையெழுத்தே மாறிப் போனது. எலும்புகள் அனைத்தும் உடைபட்ட நிலையில், உயிருள்ள பிணமாக விழுந்து கிடந்த சவுகத் கானை, வந்த நால்வரும் தூக்கிக் கொண்டார்கள். வாக்கிங் ஸ்டிக்குடன் கரீம் லாலா முன்னால் நடக்க, அவர்கள் பின்தொடர்ந்தார்கள். ஷீலாவின் வீட்டு வாசலில் அவரது அம்பாசிடர் கார் நின்றிருந்தது. கரீம் லாலா வருவதைப் பார்த்ததும், மரியாதையுடன் கார் கதவை டிரைவர் திறந்தான். சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவர், கதவை அறைந்து மூடினார். ‘‘நீ போ...’’ அடிக்குரலில் கட்டளையிட்டார். தவறு செய்துவிட்டோமோ என்று பயத்துடன் அவரைப் பார்த்த டிரைவருக்கு ஏதோ புரிந்தது. ‘சரி’ என்பது போல் தலையசைத்து வணங்கினான். ஓடிச்சென்று தன் சீட்டில் அமர்ந்தான். காரை கிளப்பினான். பறந்தான்.வாக்கிங் ஸ்டிக்கை தரையில் ஊன்றாமல் காற்றில் வீசியபடி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கரீம் லாலா நடக்க ஆரம்பித்தார். சவுகத் கானை சுமந்து வந்த அடியாட்களும் மவுனமாக அவரை பின்தொடர்ந்தார்கள். அந்த நள்ளிரவிலும் மொத்த காமாத்திபுராவும் கண்கொட்டாமல் இந்தக் காட்சியை வேடிக்கைப் பார்த்தது. வாடிக்கையாளர்கள், மாமா பயல்கள், நேற்று லைனுக்கு வந்தவர்கள், லைனிலேயே இருப்பவர்கள், வயது காரணமாக ஓய்வு பெற்றவர்கள், நடைபாதை வாசிகள்... என ஒருவர் பாக்கியில்லாமல் சகலரும் சாலையோரம் நின்றிருந்தார்கள். சவ ஊர்வலம்.அப்படித்தான் அவர்கள் அனைவருக்கும் தெரிந்தது. தெரிய வேண்டும் என்பதற்காகவே சின்ன சந்து கூட விடாமல் காமாத்திபுராவின் மூலை முடுக்கெல்லாம் கரீம் லாலா நடந்தார். மாடியில் நின்றபடி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் கங்கு. வெந்து தணிந்த உடலை, கிழிந்த போர்வை மூடியிருந்தது. அடிவயிற்றில் இருந்து பொங்கிய உணர்வை, உணர்ச்சியை அவள் அடக்கவேயில்லை. அடக்கவும் விரும்பவில்லை. கண்கள் வழியே அவைகள் வழிந்து தன் கன்னத்தை நிரப்பட்டும் என விட்டுவிட்டாள்.உடன் பிறந்த சகோதரர்கள் செய்யாதது; இந்த உலகுக்கு, தான் வர காரணமாக இருந்த தகப்பன் கனவிலும் செய்யத் துணியாதது; நல்லவர்கள், புனிதர்கள், கடவுளின் அவதூதர்கள் என ஒழுக்கவாதிகளாக பெயரெடுத்த ஒருவரும் தன் வாழ்நாளில் செய்ய முற்படாதது... ஆனால், கரீம் லாலா செய்திருக்கிறார். அவளுக்காக. அவளது வேண்டுகோளுக்காக. உடலை விற்று பிழைப்பவளுக்கும் சுய மரியாதை உண்டு என்பதை அந்த கடத்தல்காரர்தான், தெற்கு பம்பாயின் தாதா தான் உணர்ந்திருக்கிறார். அவளது கவுரவத்தை காப்பாற்ற தனது வலது கையையே அடித்து நொறுக்கியிருக்கிறார்.இனி யாரும் அவளது உடலை அவள் அனுமதியில்லாமல் தொடக் கூடாது என்று எச்சரிப்பதற்காக இதுவரை வந்திராத ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதிக்கு வந்திருக்கிறார். ஓர் இடம் பாக்கி இல்லாமல் தன் பாதம் படும்படி நடந்து கொண்டிருக்கிறார்...இருந்த இடத்தில் நின்றபடியே கையெடுத்து அவரை கும்பிட்டாள். இனம் புரியாத உணர்வுடன் தன் அறைக்கு வந்தவள், அப்படியே படுக்கையில் விழுந்தாள்.எப்போது உறங்கினாள் என்று தெரியாது. ஆனால், கண்விழித்தபோது உலகமே மாறியிருந்தது. அங்கிருக்கும் வயதான கிழவிக்கு அவளை பிடிக்காது. முன்னாள் பாலியல் தொழிலாளியான அந்த கிழவி, அவளை பார்க்கும் போதெல்லாம் எரிந்து விழுவாள். கண்களை உருட்டி உருட்டி எரிப்பாள். இந்தியில் இருக்கும் சகல கெட்ட வார்த்தைகளாலும் அவளை திட்டுவாள்.அப்படிப்பட்ட கிழவி, உறங்கி எழுந்து வந்த அவளைப் பார்த்து முதல்முறையாக புன்னகைத்தாள். பல் தேய்க்கவும், முகம் கழுவவும் தன் கையால் பணிவிடை செய்தாள். வேறு ஏதேனும் வேண்டுமா என பவ்யமாக கேட்டாள்.அந்த கிழவி என்றில்லை. மொத்த காமாத்திபுராவுமே அப்படித்தான் அவளிடம் பயம் கலந்த மரியாதையுடன் நடந்து கொண்டது.கங்குவுக்கு சிரிப்பு வந்தது. ஷீலாவை பார்க்கவோ பாவமாக இருந்தது. இனி அந்த வீட்டின் ‘அக்கா’, தான் அல்ல என்பதை உணர்ந்தவள் போல் ஷீலா கை கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தாள்.என்ன பேசினாலும் இவள் பதற்றம் குறையாது. செய்கைதான் ஆறுதல் படுத்தும். எனவே ஷீலாவை கட்டிப் பிடித்தாள். ‘‘அரைமணி நேரத்துல தயாராகிடறேன்கா. அதுக்கு அப்புறம் கஸ்டமரை அனுப்பு...’’ என்று சொல்லிவிட்டு சென்றாள்.ஷீலா இறக்கும் வரை கங்கு இப்படித் தான் நடந்து கொண்டாள். ஒருபோதும் இவளைத் தாண்டிச் செல்ல முயலவில்லை. இந்தத் திருப்தி தந்த நிறைவினாலோ என்னவோ அடுத்த மூன்று ஆண்டுகளில் ஷீலா மறைந்தாள். அதன் பிறகு கங்குவை தேடி ‘கார்வாலி’ பதவி வந்தது.காமாத்திபுராவில் ஏகப்பட்ட அடுக்குமாடிகள் கொண்ட வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீடும் பல தளங்களை கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் குறைந்தது ஐம்பது படுக்கைகள் கொண்ட தனித்தனி தடுப்புகள் இருக்கும். அதாவது ஐம்பது முதல் அறுபது பெண்கள் வரை ஒரு தளத்தில் இருப்பார்கள். இந்தப் பெண்களையும், ஐம்பது படுக்கைகளை கொண்ட அந்த தளத்தையும் எந்த பெண் நிர்வகிக்கிறாளோ அவள்தான் ‘கார்வாலி’. இப்படி ஒரு அடுக்குமாடி வீட்டில் எத்தனை தளங்கள் இருக்கிறதோ அத்தனை ‘கார்வாலி’கள் இருப்பார்கள். இந்த ‘கார்வாலி’கள் அனைவருக்கும் தலைவியாக ‘படே கார்வாலி’ இருப்பார். இவரது கட்டுப்பாட்டில்தான் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வீடு இருக்கும். அதாவது ‘கார்வாலி’கள் ராணி என்றால், ‘படே கார்வாலி’ மகாராணி.இந்த ‘படே கார்வாலி’யும் நியமிக்கப்படுவதில்லை. தேர்தல் மூலம்தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இவர்களுக்கான தேர்தல் எப்படி நடக்கிறது, யார் தலைமையில் நடைபெறுகிறது என்பதெல்லாம் ரகசியம். ஆனால், ‘படே கார்வாலி’களுக்கு என்று ஒரு சங்கமும், அந்த சங்கத்தை பம்பாய் (மும்பை) நிழலுலக தாதாக்கள் வழிநடத்துவதும் நிஜம். சுருக்கமாக சொல்வதென்றால், காமாத்திபுரா என்பது வெறும் சிவப்பு விளக்கு பகுதி அல்ல. அது ஒரு ராஜ்ஜியம். அவர்களுக்கு என்று தனி அரசாங்கம், அரசமைப்பு உண்டு. பம்பாயிலேயே அந்தப் பகுதி இருந்தாலும் மஹாராஷ்டிர மாநிலத்தின் சட்டதிட்டங்கள் அதற்கு பொருந்தாது. இந்த தனி ராஜ்ஜியத்தின் ‘கார்வாலி’யாகத்தான் தேர்தல் மூலம் கங்கு தேர்ந்தெடுக்கப் பட்டாள். பம்பாயே நடுங்க ஆரம்பித்தது. காரணம், அப்போது இந்தியப் பிரதமராக இருந்த பண்டிதர் ஜவஹர்லால் நேரு, அவளைப் பார்க்க விரும்பியதுதான்.சூரியன் பதிப்பகம்
-
மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண்.1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்:500).புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் உள்ள தமிழ்ப் பற்று அதிகம். அதிலும் படைப்புத் திறன் மிக்கவர்களிடம் அதன் ஆழமும் சொற்பிரயோக வீச்சும் மிக அதிகம்; வலிமையானதும் கூட. இதை மெய்ப்பிக்கும் விதமாகவே இந்த நூலும் அமைந்துள்ளது. என்.எஸ்.பிரபு என இலக்கிய உலகம் நட்புரிமையுடன் கொண்டாடும் இனிய மனிதர் நல்லையா சண்முகப்பிரபு ஒரு கவிஞர், எழுத்தாளர், "சர்வதேசத் தமிழர்' எனும் இதழ் மூலம் உலக அளவில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நற்பணி புரியும் பத்திரிகையாளர். மதம், அரசியல், நாட்டு நடப்பு, வரலாற்றுச் செய்திகள் என ஏராளமான விஷயங்களில் தன் பார்வைப் பதிவுகளாக யாத்த கவிதைகளை இந்நூலில் தொகுத்தளிக்கிறார். யாழ்ப்பாணத்தின் புகழ், திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., பற்றிய கவிதைகள் இவரின் கவித்துவமிக்க எழுத்தாற்றலுக்கு சான்று பகிர்கின்றன.
-
நக்கீரன், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 232)ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி.,யின் அரசியல் ஆட்சி நிலைமைகள் பற்றி சோலை பத்திரிகைகளில் நடுநிலை நின்று எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்திய அரசியலில் ஒரு காலக்கட்டத்தின் பதிவு இது.
-
நக்கீரன், விற்பனை உரிமை: ராம் பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 176).கிசுகிசு செய்தவர்களுக்கு என்றுமே வாசகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும் உண்டு. ஏற்கனவே ஒரு வார சினிமா இதழில் வெளியான கிசுகிசு செய்திகளை புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றனர். கிசு கிசு பிரியர்களுக்கு செம விருந்து!
-
யுரேகா புக்ஸ். 20/34, ரத்தினம் தெரு, கோபாலபுரம், சென்னை-86. போன்: 2835 1238. (பக்கம்: 16).பாலைவனம் தன் வரலாறை அழகுற ஆங்கிலம் / தமிழில் சொல்கிறது. "பாலைவனத்தைப் பார்க்க வேண்டுமா? என்னுடன் வாருங்கள்' என்று ஒட்டகம் அழைப்பது போன்ற முடிவு கவித்துவமானது.
-
நக்கீரன் பப்ளிகேஷன், ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 192).லத்தீன் அமெரிக்க நாடுகளின் வெற்றிகரமான விடுதலைப் போராட்டங்களை விவரிக்கும் பயனுள்ள நூல். மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் என மொத்தம் 41 நாடுகள் லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் பூர்வீகக் குடிமக்களை யு.எஸ்.ஏ., அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகள் சிலவும் அடிமைப்படுத்தி அந்நாடுகளின் வளங்களைச் சுரண்டி வாழ்ந்த வரலாற்றையும், இப்போது அந்நாடுகளின் தலைவர் அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து எழுச்சி பெற்று விளங்கும் சுதந்திரப் போராட்ட வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நூலில் கியூபா, வெனிசுலா, பெரு போன்ற 11 நாடுகளின் விவரங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் ஆசிரியர். வரலாற்று ஆர்வம் மிக்கவர்கள் படிக்க வேண்டிய அருமையான நூல்.
-
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 248).இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் காலந்தோறும் திறனாய்வாளர்களின் கருத்தைக் கவர்ந்து வருகிறது. மூலபாட ஆய்வு நிகழ்த்துவதற்கும், திறனாய்வு நிகழ்த்துவதற்கும், உண்மைகளைக் கண்டுணர்ந்து உரைப்பதற்கும் களனாக விளங்கி வரும் சங்க இலக்கியங்களில் அரசியல் பற்றிய ஆய்வை இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது.சங்க இலக்கியத்தில் காணப்படும் அரசியல் செய்திகளைத் தமிழகத்தில் காலந்தோறும் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளோடு பொருத்திப் பார்த்த ஆய்வு இது என்பதால் கவனத்துக்குரியது ஆகிறது. இந்திய விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், நிகழ்ந்த சங்க இலக்கிய ஆய்வுகள் அக்கால அரசியல் சூழ்நிலையில் ஏற்படுத்திய தாக்கங்களை இரா.நாராயணன் தெளிவுபடுத்தியுள்ளார்.சங்க இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டு வரும் பணியில் சமய இயக்கங்கள் ஈடுபட்டதையும் மறுமலர்ச்சிக் காலத்தில் நிகழ்ந்த சங்க இலக்கிய ஆய்வுகளையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். மொத்தத்தில் தமிழக - இந்திய அரசியல் வரலாற்றுக்கும், சங்க இலக்கிய ஆய்வுகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள உதவும் மிகச் சிறந்த ஆய்வு நூல் இது.ஐரோப்பிய பாதிரியார்களை குறிப்பதற்கு "தந்தைமார்' என்ற சொல்லை இந்நூலாசிரியர் பயன்படுத்தியிருப்பது மொழி பெயர்ப்பாளர்களின் சிந்தனைக்கு உரியது ஆகும்.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. (பக்கம்: 160).பணத்தை ஏன் சம்பாதிக்க வேண்டும், எப்படி சம்பாதிக்க வேண்டும், பெரும்பணக்காரர்களாக இருப்பவர்கள் எப்படி சம்பாதித்தனர் என்பதையெல்லாம் விளக்கி, எந்தெந்த நிறுவனங்கள் மக்களின் பொருளாதார நலனுக்காக இயங்குகின்றன? அவற்றின் சாதக, பாதகங்கள் என்னென்ன? போன்ற தகவல்கள் இதில் ஆதாரத்துடன் தரப்பட்டுள்ளன.இன்சூரன்ஸ், மியூச்சுவல் பண்ட், பங்குச் சந்தை போன்றவை குறித்தும், சேமிப்புக்கான முதலீடுகளை எவற்றில் போடலாம் என்பன குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.உழைத்து பெரும்பாடுபட்டு சேமிக்கும் பணத்தை என்ன செய்வது எதில் முதலீடு செய்வது என்று விவரம் தெரியாமல் தவிக்கும் பலருக்கு நல்ல வழிகாட்டி நூலிது.
-
குறிஞ்சி. 20, டீச்சர்ஸ் கில்டு காலனி, வில்லிவாக்கம், சென்னை-49. போன்: 2650 2086. (பக்கம்: 112).பதினைந்து பூச்சிகளைப் பற்றி ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு உள் ளது. நகைச்சுவை ததும்பும் வகையில் பூச்சி விவரம் தெளிக்கப்பட்டுள்ளது. "சிக்கன் குனியா' என்பது தவறு, அது "சிக்குன் குனியா' என்பதே சரி. கரப்பானின் தலை துண்டானாலும் ஐந்து நாட்கள் உயிர் வாழும். பூச்சி புத்தகத்தில் ஏராளமான ஆச்சர்யமூட்டும் நெளியல்கள் உண்டு.
-
அலைகள் வெளியீட்டகம் கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 272).தேவி பிரசாத் சட்டோபாத்யாயா ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் வி.என்.ராகவன் தந்துள்ளார். இந்தியத் தத்துவ இயஅலைகள் வெளியீட்டகம்ல் ஆழ நெடுங்கடல். அதை வெகு எளிதில் புரிந்து கொள்வது கடினம். தத்துவ விமர்சகர்கள் இந்தியத் தத்துவ இயலைப் பற்றி பல்வேறு சாதக, பாதக ஏற்புடைய முரண்பட்ட சரியான தவறான கருத்துக்களை மையப்படுத்தி விமர்சித்து வருகின்றனர். மூல நூலாசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா உலகளாவிய பிரபலமானவர், நல்ல ஆய்வாளர், சிந்தனையாளர், சீர்திருத்த, மார்க்சிய சித்தாந்தத்தில் ஆழப் புலமை கொண்டவர்.இந்தியத் தத்துவங்களில் காணப்படும் பல்வேறு விவரங்களை எளிய முறையில் சுருக்கமாகத் தந்துள்ளார் ஆசிரியர். எளியது எனக் கூறினாலும், எளிதில் படித்துப் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமம் உள்ளது. "இந்தியத் தத்துவத்தின் வளர்ச்சி' எனத் தொடங்கி "லோகாயதம்' என 28 தலைப்புகளில் ஓர் ஆய்வு நூலைத் தந்துள்ளார். தத்துவ இயலில் அக்கறை கொண்ட அனைவரும் படித்துணர்ந்து பயன் பெறக்கூடிய ஒரு நல்ல ஆய்வு நூல்.
-
ஸ்ரீதேவி பதிப்பகம், மனை எண். 50, கதவு எண்.1457, ஸ்ரீவெங்கடேச நகர், சமத்துவபுரம் சாலை, புதுக்கோட்டை -622 004. (பக்கம்: 348).பாராட்டு என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. செயற்கரிய செயல்களை செய்யும்போது அதைப் பாராட்டாமல் விட்டால் அதுவே ஒரு தவறாக அமைந்துவிடும். தனது செயல் பிறரது அங்கீகாரத்தைப் பெறுகிறது என அறியும்போது ஒவ்வொரு படைப்பாளியும் மகிழ்ச்சி அடைகிறான்.வியர்வையின் வெற்றிகள் என்ற இந்நூலில் 33 சான்றோர்கள் பாராட்டப் பெற்றுள்ளனர்.இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரின் வாழ்க்கைக் குறிப்புகளும் உழைத்து முன்னேற புகழ் பெற விரும்பும் அனைவருக்கும் ஒரு உந்துதலாக அமையும்.
-
மாரி பதிப்பகம், "சிவகலை' இல்லம், 29, நாகாத்தம்மன் கோவில் தெரு, கொட்டுப்பாளையம், புதுச்சேரி-605 008. (பக்கம்: 224).உளவியல் அறிஞர் சிங்மன் பிராய்டு, தனது ஆய்வுகள் மூலம் பல அரிய விஷயங்களை உள்ளத்தியல் மூலம் உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். விவாதத்திற்கும் சர்ச்சைக்குரியவையும் அவற்றில் சில உண்டு. உள்ளத்தியல் பேராசிரியராகப் பணிபுரியும் க.நாராயணன், இந்த புத்தகத்தில் உள்ளத்தின் இயல்பு, அதன் செயல்பாடுகள், மானுட வாழ்வில் அதன் பங்களிப்பு, உள்ளத்தில் ஏற்படும் சில முக்கிய கோளாறுகள், அவற்றைத் தடுப்பதற்கும் களைவதற்குமான வழிகள் எனப் பல விஷயங்களைப் பற்றி விரிவாக விவாதிக்கிறார். அறிவியல் தொடர்பான தகவல்கள், தமிழுக்கு இந்த வகை நூல்கள் மிகவும் தேவையானவை. ஆசிரியரின் எளிய தமிழ் நடை பாராட்டுக்குரியது.
-
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 264).அமெரிக்க எழுத்தாளர்கள் 50-60 ஆண்டுகளுக்கு முன்னர் வித்திட்ட சுயமுன்னேற்ற நூல்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகையும் ஆட்டிப் படைத்து வருகிறது! நன்கு அறிமுகமான எழுத்தாளர் பதிப்பாளர்கள் மட்டுமல் லாது, பரிச்சயமற்ற, புதுப்புது முகங்களும் அரங்கேறி வருகின்றனர். வாசக அன்பர் களது எதிர்பார்ப்புகளை அவர்களால் பூர்த்தி செய்ய இயலுகிறதா, அவை உரிய வரவேற்பைப் பெறுகின்றனவா என்பது மில்லியன் டாலர் கேள்வி!
-
நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. (பக்கம்: 322). நாவலாசிரியர், வானிலெவ்ஸ்கா - "ருஷ்ய -போலிஷ்' பெண் எழுத்தாளர்."யுத்த காலத்திலே உலகத்திலே வெளிவந்த நூல்களில் தலை சிறந்தது' என்று ஸ்டாலின் விருது பெற்ற நாவல்.மனித உயிர்களை மிகவும் மலிவாக எண்ணி கொன்றுக் குவித்தவன் ஹிட்லர். அவன் சோவியத் யூனியன் மீது பாய்ந்தான். கொடூரத்தனமான பாஸிஸ்டுகளைக் கிராமவாசிகள் எவ்வாறு வெற்றி கண்டனர் என்ற வீர தீரச் செயல்களை இந்த நாவல் சித்தரிக்கிறது.வாண்டா - எனும் உலகம் போற்றும் எழுத்தாளர் எழுதிய நாவலைத் தமிழ் அறிஞர்களான ஆர்.ராமநாதன், ஆர்.எச்.நாதன் இருவரும் சிறப்பாகத் தமிழாக்கம் செய்துள்ளனர்.
-
ஸ்ரீஆனந்த நிலையம், 29/5, ரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 136). தற்போது கம்பெனிகளின் மதிப்பு, தராதரம், செயல்பாடுகளைப் பொறுத்து ரூ.50 முதல் ரூ.500க்கும் அதிகமான பிரிமியம் தொகை செலுத்தி விண்ணப்பிக்கும்போது சிறு முதலீட்டாளர்களுக்கு ரேஷனாக 10-15 பங்குகள் மட்டுமே, அதுவும் குலுக்கல் முறையில் ஒருசில அதிர்ஷ்டசாலிகளுக்கு மாத்திரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இமயத்தை தொட்டுக் கொண்டு ஊசலாடி வருவதும் பரமபத சோபன (பாம்பு -ஏணி) விளையாட்டைப் போன்று, ஏறுவதும், இறங்குவதுமானதோர் நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.இத்தகைய சூழலில் முதலீட்டாளர்களுக்கு ஓர் ஒப்பற்ற வாய்ப்பாகவும், வேறு எந்த முதலீடுகளையும் விட, பாதுகாப்பான, நம்பிக்கைத் தன்மையுடன் கூடியதாக மியூச்சுவல் பண்டு விளங்குகிறது. எந்த நேரமும் வாங்கவும், விற்கவும் வசதிகள் இதில் உள்ளன.இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் காலூன்றிய இத்தகைய பண்டு தற்போது முப்பது நிறுவனங்களாகப் பெருகியதுடன், பொதுமக்களிடம் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயைப் பெற்று, மக்களின் தேவைகளைப் புரிந்து, நம்பிக்கையுடன் செயலாற்றி வருகின்றன. இத்தகைய செய்திகளுடன் மியூச்சுவல் பண்டு செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தாங்கிய அறிமுக நூலாக பால பாடமாக இது அமைந்துள்ளது.தனி நபர் வருமானம் மேம்படுத்துவதற்கான அறிவுரைகள் வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நூல்கள், குடும்ப நலன், பொருளாதார வளம் கருதி, தமிழில் மேலும் வெளிவர வேண்டும்.
-
தணல் பதிப்பகம், 39/13, ஷேக் தாவூத் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 88). விடுதலை பெற்ற நாள் முதல் எந்த வல்லரசுடனும் அணி சேராது நடுநிலைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் இந்தியா மூன்று சதவீத அணுமின் உற்பத்திக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராகியிருக்கிறது. இந்த அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மகா அபாயகரமானது. இது அமெரிக்காவுக்கு இந்தியா எழுதிக் கொடுக்கும் அடிமைச் சாசனமாகவே இருக்கும் என்பதை அரசியல் விமர்சகரான ஆசிரியர் விரிவாக அலசியிருக்கிறார். இந்த நூலில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய தெளிவான அறிவைப் பெற விரும்புவோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
-
டாக்டர் மாலினி மெமோரியல் டிரஸ்ட், 14, வியாசர் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை-59. (பக்கம்: 176). 92 வயதைத் தொட்டிருக்கும் ஒரு ஓமியோபதி டாக்டர் தான் ஆட்டோமொபைல் இன்ஜினியராக ஆசைப்பட்டு மருத்துவரான தன் வாழ்க்கைக் கதையை மிகச் சுவையாக எழுதியிருக்கிறார். சாதிக்கத் துடிக்கும் மருத்துவ மாணவர் களும் சரி, இளைஞர்களும் சரி, அவர்களுக்கு எழுச்சியும், நம்பிக்கையும் ஊட்டும் ஒரு சுய வரலாற்று நூல்.
-
அட்சரா பப்ளிகேஷன்ஸ், எண்-5ஏ/13, கனகராஜா தெரு, ராஜகீழ்ப்பாக்கம், சென்னை-600 073. அலைபேசி: 99446 20428. இந்தியப் பாரம்பரியம் மானுட வாழ்வை பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற நான்கு சீரான படிநிலைகளில் அமைத்துள்ளது. இதில், ஒவ்வொரு நிலையையும் நிறைவாக வாழ்வதே வாழ்க்கை. மேலே குறிப்பிட்ட நான்கு நிலைகளில் பெரும்பாலானவர்கள் தேர்ந்தெடுப்பது இல்லறத்தைத் தான்."இல்லறமல்லது நல்லறமன்று' என்பார்கள். இல்லறத்துக்கு அஸ்திவாரம் தாம்பத்யம். இந்தத் தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கல்களுக்கான தீர்வையும் உளவியல் ஆலோசனைகளும் இந்நூலில் உள்ளன.இந்நூலில் எப்போதிலிருந்து செக்ஸ், திருமணத்தில் செக்ஸ், கர்ப்பக்காலத்தில் செக்ஸ், வக்கிரமான செக்ஸ், மாறுபட்ட செக்ஸ், பேச்சில் வக்கிரம், தொலைபேசியில் விரசம், இயந்திரத்தனமான செக்ஸ், செக்சுக்கு அடிமை, ஓரினச்சேர்க்கை, முதுமையில் செக்ஸ், முதுமையில் முடியுமா போன்ற அந்தரங்கமான சந்தேகங்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களை நூலாசிரியர் அளித்துள்ளார்.தாம்பத்யத்தில் சிக்கல் இல்லாதவர்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படக்கூடியது. மனித மனத்தின் பல சிக்கல்களை விடுவிப்பதாக இருக்கிறது.இரண்டாவது நூலான "எஸ்' செக்ஸ் - சிக்கல்கள் - தீர்வுகளில் என்ற நூலில் பாலியல் சார்ந்த தெளிவை ஏற்படுத்தும் நூல்.பாலியல் பற்றிய பொதுவான புரிதல் பல தவறான அநுமானங்களையும் அறியாமையையும் கொண்டதாகவே இருக்கிறது. பாலியல் சிக்கல்களினால் தாம்பத்யம் சிதைந்து கசந்துபோன வாழ்க்கையை மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள் அநேகம் பேர்.பாலியல் சிக்கல்களை வெளிப்படையாகப் பேச, ஆலோசனை கேட்க கூச்சப்படும் சூழ்நிலை பலர் வாழ்வை நரகமாக்குகிறது.இந்நூலில் சல்லாபத்தின் அவசியம், பின் சல்லாபத்தின் தேவை, பணியிடத்தில் பாலியல் தொல்லை, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை, பெண்களின் ஆர்வம், ரத்த அழுத்தம், கொழுப்பு மிகுதி, சர்க்கரை நோய் செக்சை பாதிக்குமா?, ஊனமுற்றோர் செக்ஸ், மனவளர்ச்சி குன்றியோர் செக்ஸ், மனநோயும் செக்சும், பழி தீர்க்க செக்ஸ்?, புகையிலையின் தாக்கம், எத்தனை முறை, எவ்வளவு நேரம், உச்சம் அடைதல், உடல் அளவுகள் ஆகியவை பற்றி அறிவியல் பூர்வமான விளக்கங் களை கண்டறியலாம்.
-
திருவரசு புத்தக நிலையம், தீனதயாளு, தெரு, சென்னை-17. (பக்கம்:210) மகிழ்ச்சி பூக்கள் மலர, முதல் சத்சங்கங்களில் சேருங்கள் முடிய 30 அத்தியாயங்களில் வெற்றிகரமான வாழ்க்கைக்கான வழியை சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். திருமணங்களுக்குப் பரிசளிக்க உகந்த நூல்.
-
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், கடலங்குடி ஹவுஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176). அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளின் அற்புதத் தொகுப்பு. ஒவ்வொருவரும் படித்து பாதுகாக்க வேண்டிய நூல்.
-
அம்ருதா பதிப்பகம், 5, ஐந்தாம் தெரு, சக்தி நகர், எஸ்.எஸ்.அவென்யு, போரூர், சென்னை - 600 116. போன்: 044- 2252 2277. (பக்: 112) கடந்த 50 ஆண்டு காலமாக எழுதி வருபவர் அசோகமித்திரன். தமிழ்ச் சூழலில் தனித்து நிற்கும் எழுத்து அவருடையது. ஆடம்பரங்களும், ஆரவாரங்களும், அகங்காரமும் இல்லாதது.அலைகளற்ற ஆழ்கடல் போல அமைதியானது. ஆர்ப்பரிப்புகள் அற்றது; எளிமையானது. மிக மிக எளிமையானதாகத் தோன்றி தன்னுள் பொதிந்திருக்கும் நுட்பங்களை முதல் பார்வைக்கும், சிரத்தையற்ற வாசிப்புக்கும் கூட எளிமையானது. அந்த விதத்தில் ஹெமிங்வேயை நினைவூட்டுவது. அவரை இளந்தலைமுறையினரிடம் இத்தொகுப்பு கொண்டு செல்லும் இதே வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் தலைச்சிறந்த படைப்பாளிகளான புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா, ஜெயகாந்தன் உட்பட 18 எழுத்தாளர்களின் படைப்புகளையும் "அம்ருதா பதிப்பகம்' கைக்கு அடக்கமான அழகிய பதிப்பாக, மலிவு விலையில் வெளியிட்டுள்ளது; பாராட்டுக்குரியது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்