Advertisement

பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 17)


பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 17)

₹ 320

எழுத்துரு அளவு:

நல்ல நகைச்சுவை அது, எந்த நாட்டுக்கு சொந்தமாக இருந்தாலும், அதை தேடிப் பிடித்து படித்து, பின், அதை தன் பாணியில் வாசகர்களுக்கு தருவதில் அந்துமணிக்கு நிகர் அந்துமணி தான்.காரணம், அவரே ஒரு நடமாடும் நகைச்சுவை பல்கலைக்கழகம் என்பதால்!நீண்ட இடைவெளிக்கு பின் வந்துள்ள அவரது, ‘பார்த்தது கேட்டது படித்தது பாகம் – 17’ புத்தகம் நல்லதொரு நகைச்சுவை விருந்தாக வந்துள்ளது.கஞ்சத்தனத்திற்கு பெயர் பெற்ற ஸ்காட்லாந்து நாட்டினர் பற்றிய ஜோக்குகள் செம சிரிப்பை ஏற்படுத்துகின்றன.‘செருப்பு திருடியதை ஒப்புக் கொள்கிறாயா?’ என்று கேட்டார் நீதிபதி.‘நான் திருடவில்லை ஐயா... இந்த செருப்பை ஸ்காட்லாந்துகாரர் ஒருவர் அன்பளிப்பாக தந்தார்...’ என்றான் குற்றவாளி.‘நீ திருடியதைக் கூட மன்னிக்க தயாராக இருக்கிறேன்; ஆனால், ஸ்காட்லாந்துகாரர், ‘அன்பளிப்பாக’ தந்தார் என்று பொய் சொன்னாய் பார்... அதை மன்னிக்கவே முடியாது...’ என்றாராம் நீதிபதி.அந்த அளவிற்கு புகழ் பெற்றது ஸ்காட்லாந்துகாரர்களின், ‘தயாள’ உள்ளம் என்பதை, இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.நீண்ட காலம் தம்பியை பிரிந்து சென்ற அண்ணன், மீண்டும் தம்பியை காண வந்தார். பாசப்பெருக்கில் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.பின், தம்பியைப் பார்த்து அண்ணன் கேட்டார்... ‘ஏன் இவ்வளவு தாடியுடன் இருக்கிறாய்? என் பிரிவு உனக்குள் அவ்வளவு சோகத்தை ஏற்படுத்திவிட்டதா?’ என்று!அதற்கு அந்த தம்பி, ‘அப்படியெல்லாம் இல்லை அண்ணா... நீங்கள் போகும்போது, நம் இருவருக்கும் பொதுவான ஷேவிங் ரேசரை துாக்கிச் சென்று விட்டீர்கள்...’ என்றானாம்!இரண்டு ஸ்காட்லாந்து ஆசாமிகள் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.ேஹாட்டல் சிப்பந்தி ஓடோடி வந்து, ‘ஐயா... உங்கள் குடையை டேபிளிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள்...’ என்று சொல்லி ஒரு குடையை கொடுத்தார்.அதை வாங்கிக் கொண்டவர், ஹோட்டல் சிப்பந்திக்கு நன்றி சொல்லி, ஒரு ரூபாய், ‘டிப்ஸ்’ கொடுத்தார்.இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பர், ‘நீ ஒரு ரூபாயெல்லாம், ‘டிப்ஸ்’ தர மாட்டாயே? இன்று உனக்கு என்னாச்சு?’ என்று கேட்டார்.‘ஒருத்தன் ஒரு குடையை சும்மா கொண்டு வந்து வச்சுக்க என்று சொல்லி கொடுத்துவிட்டு போகிறான்; அவனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காவிட்டால் எப்படி?’ என்று பதில் தந்தாராம்!அடுத்து ஸ்காட்லாந்து விஷயமல்ல; நம்மூர் விஷயம்.ஓர் எழுத்தாளர் மாணவப் பருவத்தில் இருந்த போது எழுதிய கட்டுரையைப் படித்த வகுப்பாசிரியர், ‘எதற்கு இந்த கட்டுரையில் இவ்வளவு குடிசை தொழில்கள்?’ என்று கேட்டாராம்.மாணவர் புரியாமல் விழித்திருக்கிறார்.‘சரடு விடுதல், கயிறு திரித்தல், கூடை முடைதல் போன்றவற்றை எல்லாம் கட்டுரையில் காட்டக்கூடாது; அதெல்லாம் குடிசை தொழில்கள்...’ என்றாராம் அந்த ஆசிரியர்!நீண்ட ஆண்டுகளுக்கு பின், அந்த மாணவரை அதே ஆசிரியர் சந்தித்தாராம்...‘என்னப்பா செய்கிறாய் இப்போது?’ என்று கேட்டிருக்கிறார்.‘எழுத்தாளராக இருக்கிறேன்...’ என்று நண்பர் பதில் தந்திருக்கிறார்.‘இப்போதும் அதே, ‘குடிசை தொழில் தானா?’ என்று கேட்டு ஆசிரியர் சிரித்தாராம்!இப்படி புத்தகம் முழுதும் நகைச்சுவையான விஷயங்களை அள்ளி தெளித்துள்ளார்.அதே நேரம் இவரளவு புத்தக வாசிப்பை நேசிப்பவர் யாரும் இருப்பரா என்று சந்தேகம் கொள்ளுமளவு நிறைய புத்தகங்கள் படித்துள்ளார். ரயில் பயணத்தின் போது புத்தகங்கள் படிக்கிறாரா அல்லது புத்தகங்கள் படிப்பதற்காகவே ரயில் பயணங்கள் மேற்கொள்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, இந்த புத்தகத்தில் அவர் நிறைய பயணம் செய்கிறார், நிறைய படிக்கிறார். தான் படித்ததை ரத்தினச் சுருக்கமாக சுவாரசியமாக நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின், ‘நெஞ்சுக்கு நீதி’யும் அப்படி அவர் படித்த புத்தகம்!அதில் இருந்து உருக்கமான பகுதி இது:என் மனைவி பத்மாவதியின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது; டாக்டர்கள் வீட்டிற்கு கொண்டு போய்விடுங்கள்; இருந்து பயனில்லை என்று சொல்லிவிட்டனர்.சென்னைக்கோ, திருச்சிக்கோ அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்க வசதியில்லாத நிலையில், அவளை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.தவிர்க்க இயலாத சூழ்நிலையில, புதுக்கோட்டை பொதுக் கூட்டத்திற்கு போய்விட்டு இரவோடு இரவாக லாரியைப் பிடித்து வீட்டிற்கு வந்தால், அதற்குள் பத்மாவதி போய்விட்டாள்.அருகே சென்றேன், என் கண்ணீர் துளிகள் அவளின் சலனமற்ற முகத்தில் விழுந்து உருண்டன. மெதுவாக குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.அவளுக்கு தர அது ஒன்று தான், அப்போது என்னிடமிருந்தது.– படித்த எனக்கு நெஞ்சம் கனத்தது.நெஞ்சுக்கு நீதியை இவர் படித்தது போல, உடன்பிறப்புகள் கூட இந்தளவிற்கு ஆழமாக படித்திருப்பரா என்பது சந்தேகமே!அந்துமணியின் நட்பு வட்டம் கடலளவு பெரியது மட்டுமல்ல; கடல் தாண்டியும் விரிந்துள்ளது.அப்படி கடல் தாண்டி வந்த நண்பர் ஒருவர், நம்மூர் நகைக்கடைக்கு சென்று நகை வாங்கியிருக்கிறார். கடைசியில், ‘பில்’ வந்த போது, சேதாரம் (வீணான தங்கம்) என்று குறிப்பிட்டு ஒரு பெரிய தொகை எழுதியிருந்தனர்.நண்பர் அதைப் பார்த்து விட்டு, ‘இந்த நகை செய்யும் போது, இவ்வளவு சேதாரமாகிவிட்டதா... பரவாயில்லை, சேதாரமான அந்த நகையை தனியாக தந்து விடுகிறீர்களா?’ என்று கேட்டுள்ளார். கடைக்காரர் இதை எதிர்பார்க்கவில்லை. ‘அது பழக்கமில்லையே...’ என்று இழுத்திருக்கிறார். ‘அப்படியானால் எனக்கு இப்படி வாங்கி பழக்கமில்லை...’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.இன்றைக்கும் இந்தோனேஷியாவில் சேதார தங்கத்தை தனியே கட்டி வைத்துவிடுவர்; நமக்கு அது தேவை இல்லையெனில் பில் தொகையில் கழித்துக் கொள்வர்.பல்வேறு மேலை நாடுகளில் தங்கம் விற்பதற்கும், நம்மூரில் தங்கம் விற்பதற்கும் உள்ள விஷயங்களை இப்படி அடுக்கிவிட்டு, ஏழை எளியவர்களின் சிறு முதலீடே தங்கம் தான்; அதில் கை வைக்கலாமா? என்று கவலையுடன் கேட்கிறார்.தன் தகவலுக்கு தகுந்த போட்டோக்களை தருவதும், அந்துமணியின் ஸ்பெஷாலிட்டியாகும். இந்த இதழில், ஒரு போட்டோகிராபர் பற்றிய அருமையான குறிப்பு ஒன்றை கொடுத்துள்ளார்.கிரிகோரி ஸ்டாக் என்ற அந்த வெள்ளைக்கார போட்டோகிராபர், உலகம் முழுதும் சுற்றி எடுத்த படங்களை வைத்து கண்காட்சி நடத்தி வருபவர். அவர், குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் படம் எடுக்கும் போது, ‘சீதி’ என்ற ஆதிவாசியின மக்களை சந்தித்திருக்கிறார்.அவர்களைப் பற்றிய விபரம் அறியப் போய், அது எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் மக்கள் எப்படி எல்லாம் அடிமைப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றனர் என்ற நீண்ட நெடிய சோகம், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கண்ணீர் கதையாகும்.அதே போல குடிப் பழக்கத்தால் நேரிடும் கேடு குறித்து, எப்போதுமே அழுத்தம் திருத்தமாக சொல்லக்கூடியவர் இதைப் படித்துவிட்டு, ஒருவர் குடிப்பழக்கத்தை விட்டால் கூட, அது என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என்பவர், இந்த புத்தகத்தில் குடியின் கேடு குறித்து, பல இடங்களில் குறிப்பிட்டு இருந்தாலும், 31ம் பக்கத்தில் விவரித்துள்ள ஒரு உண்மைச் சம்பவம் நம்மை உலுக்கி எடுத்து, உள்ளம் பதற வைக்கிறது.ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால், அந்த விஷயத்திற்கு முன் பின்னாக பக்கம் பக்கமாக எழுதிய புத்தகத்தை, ‘தலையணையாக்குவதில்’ எல்லாம் இவருக்கு உடன்பாடில்லை! இன்றைக்கு பிரபலமாகியிருக்கும் செய்திகள் சில வரிகளில், 60 வினாடியில் 60 செய்திகள், செய்தித் துளிகள், விரைவுச் செய்திகள் என்ற அனைத்திற்குமே இவரே வழிகாட்டி என்பதை, 2006களிலேயே இவர் கையாண்ட உத்தியை, இந்த புத்தகத்தைப் பார்த்து, படித்து தெரிந்து கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.சென்னை என்ன விலைக்கு விற்கப்பட்டது?சிதம்பரம் நடராஜர் கோவில் கூரையில் வேயப்பட்ட, 21 ஆயிரம் பொன் ஓடுகளும், 72 ஆயிரம் பொன் ஆணிகளும் சொல்வது என்ன?நடையன்கள் என்றால் என்ன?போலீஸ் மாங்காய் எங்கு கிடைக்கும்?உலகம் முழுதும் கொடிகட்டி பறக்கும் ஹோண்டா பிறந்த கதை!ஜீன்ஸ் பிறந்த கதை!பந்திக்கு முந்து என்ற பழமொழியின் உண்மை வடிவம்!ஜி.டி.நாயுடுவின் கதை!யானைகளின் ராணி யார் தெரியுமா?என்பது போன்ற அறிந்திடாத பல செய்திகளை, சில வரிகளில் கிடுகிடுவென சொல்லிச் செல்கிறார்.தண்ணீருக்காக நாம் படும்பாடு படாதபாடாக இருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் பாலைவனத்தில், ‘நேமி’ என்ற இடத்தில் உள்ள மக்கள் செய்து வரும் தண்ணீர் நிர்வாகத்தால், தாங்கள் வாழும் பாலை நிலத்தை சோலைவனமாக்கி வைத்துள்ளனர். இது அங்கே சாத்தியமாகும் போது, இங்கே சாத்தியமாகாதா? அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தான் பதில் சொல்ல வேண்டும். இவர்கள், புத்தகத்தை படித்தனர் என்றால் நிச்சயம் பதில் தருவர்; செயலிலும் இறங்குவர்!– எல்.முருகராஜ்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 112).புகழ் மிக்க இஸ்லாமியர் பெருமக்கள் வரலாறுகளிலிருந்து அவர்களது தூய்மை, மதிநுட்பம், வீரம், தியாகம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை போன்ற மிக உயரிய பண்புகளைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைக் கட்டுரை வடிவில் சுவையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சன்னை-02. (பக்கம்:222)ஜூனியர் விகடன் இதழில் ஜென்ராம் எழுதிய 47 செய்தி விமர்சனக் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 196). இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும்,"கடி தோச்சி மெல்ல' உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.

  • புதுச்சேரி வரலாற்று சங்கம், 86, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 312).புதுச்சேரி, வரலாற்று நாயகர்கள், புலவர்கள், இலக்கியம், காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர், என்ற தலைப்புகளில் ஆற்றிய பேருரைகள் 52 கட்டுரைகளாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் மணி மணியான கட்டுரைகள். ஆழ்ந்து வாசித்து அசை போட வேண்டியவை. குறிப்பாக "புதுவையில் பாரதி' என்ற கட்டுரையின் இறுதியில் "புதுவை அந்தப் பாட்டுப் பறவையை (பாரதி) பத்தாண்டுகள் பாதுகாத்துப் படைப்பிலக்கியம் பல படைக்கச் செய்தது. பறந்து சென்ற மூன்றாண்டுகளில் (பாரதி மீண்டும் தமிழகம் வந்து) அதன் சிறகொடித்துச் சாகடித்து தமிழ்நாடு' என்ற வரிகள் தமிழர் நெஞ்சை கனக்கச் செய்யும்.

  • ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 190)."சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று முன்பு விளங்கியது. அரசியலில் மட்டும் அன்று; கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலும் தான். சமணர் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று மொழி அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது.கொல்லாமை, புலால் மறுத்தல், பிறரைத் துன்புறுத் தாமை, சமூக சமத்துவம், பெண் சமத்துவம், சமய சகிப்பு, கல்வி வளர்ச்சி, தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சி ஆகிய இந்தத் தடங்களில் தமிழகத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் முன்னேற்றியது சமணம் என்பதை இந்நூலின் கட்டுரைகள் சான்றுகளுடன் சாதிக்கின்றன.சிந்து சமவெளி நாகரிகம் சமணமே என்றும், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நீலகேசி முதலிய தமிழ் இலக்கியங்கள் சமண இலக்கியங்களே என்றும் உறுதி செய்கிறார். எண்குணத்தான், ஐந்து அவித்தான், இருள் சேர் இருவினை, போன்ற குறள் பகுதிகளுக்குச் சமணத்திலிருந்து விளக்கம் தந்துள்ளார்.பள்ளிக்கூடம் என்று இன்றும் நாம் அழைக்கும் கல்விச் சாலையின் பெயரை தந்தது சமணம். சைன மதத் துறவியர் இருந்த இடமே "பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன. அங்கிருந்து அவர்கள் கல்வி தானம் செய்ததால் தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது. சமணராகிய தமிழ் ஜைனர்களின் மதச் சடங்குகள், கலை வளர்ச்சிகள், பண்பாடு ஒழுக்கங்கள், இவை இன்று நம் கண் முன் வாழும் வடநாட்டு வட்டி வாங்கும் சேட்டுகளாகிய ஜெயின்களிடமிருந்து மாறுபட்டது. தமிழுக்கே உரித்தான தமிழ்ச் சமணத்தின் பழமையும், பெருமையும் இந்த நூலைப் படித்தால் உணர்ந்து போற்றலாம்.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.

  • தமிழாய்வு: கடந்த காலமும் வருங்காலமும் என்னும் பொதுப் பொருளில் நிகழ்ந்த முதன் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. (ஒவ்வொன்றும் 256 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ.80) மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்-608 001.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து நிறுவியுள்ள கல்விசார் அமைப்பு தமிழாய்வு மன்றம், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் கருத்தரங்கக் கட்டுரைகள். அவற்றைத் தொகுத்து "ஆய்வுகளாக ஐந்து தொகுதிகளாக உருப் பெற்றிருக்கிறது.தமிழிலும் ஆங்கிலத்திலும் 460 ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லா தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை அளித்து அசத்தி விட்டனர் ஆய்வாளர்கள்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை மாணவர்கள் பன்னாட்டு மாணவர்களைக் கொண்டு மாணாக்கர்களுக்கு நடத்தும் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒளிவீசும் மணிக் கதிர்களின் அணிவகுப்பாக அழகுற வருகிறது இந்த ஆய்வுக்கதிர்- என சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் வ.ஜெயதேவனால் பாராட்டப் பெற்ற தொகுதிகள் இவை.இத்தொகுதிகள் ஆய்வுக் கடல். அனைவரும் இத்தொகுதியில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

  • நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192).பத்திரிகையில் தொடராக எழுதிய 39 கட்டுரையின் தொகுப்பு தான் இந்த நூல். உலக இலக்கியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு அவை கட்டுரையாக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர் அப்துல்காதர் பேச்சாளர் என்பதால் அவரையும் அறியாமல் எழுத்து நடையை விட பேச்சு நடை கைகொடுத்திருப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தலைப்புகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.அன்பே! அந்தக் கொசுவினைச்சாகடித்து விடாதே! அந்தக் கொசுமுதலில்உன்னைக் கடித்தது!

  • வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).பிரபல நாளேட்டில் நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரான இந்தப் பேராசிரியரின் சொல்லாற்றல் நாம் அறிந்தது தான். ஆனால், எழுத்தாற்றலை இந்த நூல் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். 24 கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர் தொடங்கி அம்ருதாபிரீதம் வரை, மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாறுவதைப் பற்றிய ஒரு வழி அனுப்பு உபசாரக் கட்டுரையில் ஆரம்பித்து வரி கட்டுவது சுமையா, சுகமா என்ற கேள்வியை எழுப்பி, விழிப்புணர்வு பிரசாரக் கட்டுரை வரை, பலதரப்பட்ட விஷயங்களை சுவைபட ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் உள்ளவைகளை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் நமக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை ஆசிரியர் சுவைபட எடுத்துச் சொல்லியிருப்பதை உணர முடிகிறது. பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகம்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 72).வேடர்கள் குலத்தில் உதித்து தங்கள் உறுதியான பக்தி நெறியால் பெரும் சாதனை படைத்த பன்னிருவரது வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் ஜாதி வேறுபாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் நூல்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • க.தி. அருள்மன்றம், வகுளமாலிகா, மாருதிநகர், மதுராந்தகம்-603306. (பக்கம்: 148)பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக உள்ள இந்நூலில், ராமாயணம் குறித்து பெரும்பாலான கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையின் தலைப்பே, நூலின் பெயராக விளங்குகிறது. பேச்சாற்றல் மிக்க இந்நூலாசிரியர், தம் எழுத்தாற்றலையும் இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.கும்பகர்ணன் உறங்கவில்லை என்ற முதல் கட்டுரையில் "ஆசில் பரதாரம்' என்று தொடங்கும் கம்பரின் பாடலை நன்கு விளக்கியுள்ளதும் (பக்.2), கும்பகர்ணன், வீடணன் இருவரும் முறையே வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவர்கள் என்று ஒப்பிடுவதும் (பக்.4). மூக்கில்லாத தவளும் இடையில்லாதவளும் என்ற கட்டுரையில் கம்பனின் நகைச்சுவையை விளக்குவதும் (பக்.32, 33), இராமபிரானின் சிறப்பை எண்ணி சீதை அழுவதை விளக்குவதும் (பக்.79), நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். படிக்கத்தக்க பயனுள்ள நூல்.

  • தமிழாய்வு மன்றம் எடுத்த இம்முயற்சி அமிழ்தினும் இனிய தமிழைப் பரப்பும் பணியாகும். ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெறுவதையும் வரவேற்கும் செயல் உலகத்தோடு ஒட்ட ஒழுகலைப் படம் பிடிக்கிறது. அதனால் தான் தொல்காப்பியத்துச் செய்யுளியலில் உள்ள "நோக்கு' என்பதற்கு இளம்பூரணர் உரையை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் போலும். திருக்குறள் மூல நூலை சிதைப்பதைச் சாடுகிறார் தமிழண்ணல். அக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக சங்கம் வளர்த்த பெருங்கோமான் பாண்டியத்துரைத் தேவர் பண்பாடு இன்று எல்லாராலும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல். "துவக்கம்' என்ற சொல் சரியல்ல: "தொடக்கம் ' என்பதே இலக்கண வழக்கு என்று வினா -விடையில் தரப்பட்டிருக்கும் தகவல். ஆழமாக தமிழைக் கற்றுத் தெளிய விரும்பும் ஆர்வலர் அனைவரும் விரும்பி இந்த இதழைச் சுவைப்பர் என்பது நிச்சயம்.

  • வள்ளி சுந்தர் பதிப்பகம், எண்.84/14, மீர்பக்சிஅலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 152). "கருவறையின் அதிர்வுகள்' துவங்கி, "இணைய வெளிப்பந்தலில்' ஈறாக சுமார் 16 இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம். "மனித உடலின் வலப்பக்கம், இடப்பக்கம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அதை அந்த உடலின் ஊனம் என்றே கருதுகிறோம். அதுபோல சமுதாயத்தில் "ஆணும் பெண்ணும்' என்று "வெளிச்சத்துக்கு வராத வேதனைக் காட்சி'களைக் கண் முன் நிறுத்தும் இக்கட்டுரையாசிரியரின் "மும்பையில் தமிழ் இலக்கியம்,' "விழி தேடும் விடியல்கள்,' "தீக்குள் விரலை வைத்தால்' போன்ற விமர்சனக் கட்டுரைகள் இலக்கியங்கள் மீதும் அதையும் விஞ்சி சமுதாயத்தின் மீதும் அவர் கொண்டுள்ள நேயம் பற்றி பறை சாற்றுகின்றன. "புதிய மாதவி, அரபிக் கடலோரப் புயல்... அது காயப்படுத்தாது, நியாயப்படுத்தும், அவரது கோபமும் நியாயமானது தான்' என்ற மாலன் கூற்றில் உள்ள உண்மை இந்நூலை வாசிப்பவர்களுக்கு புலப்படும்.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 136).அணில் கடித்த பழங்கள், மரபின் மைந்தன் முத்தையா கட்டுரையும், பஞ்சவடியின் நிழலில்... எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும், தென்காசியில் நடைபெற்ற டி.கே.சி., விழாவின் சிறப்பை விவரிக்கிறது. நாமும் விழாவில் கலந்து கொண்ட உணர்வு டி.கே.சி.,யின் சிவலிங்கம் இருந்த குறிப்பேட்டில் சைவ இலக்கியப் பாடல்களையும் சங்கு முத்திரை கொண்ட பக்கத்தில் வைணவ இலக்கியப் பாடல்களையும் காண முடிகிறது. அவர் சுவைத்த 116 பாடல்கள் நூலில் இடம் பெற்றுள்ளது. நாமும் சுவைத்து மகிழலாம்.

  • வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். (பக்கம்: 112). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இக்காலத்தில் இன்றியமையாதது. இதை 13 கட்டுரைகளாக இந்நூலில் காணலாம்.இயற்கையை காத்தல், கடலோடிகள், பாரம்பரிய தகவல்கள், கடல்சார் குறிப்புகள், கடல் பற்றிய மரபுவழி அறிவு, மீன் பிடிக்கும் முறைகள், முத்துக் குளித்தல், மீனவர் பெற வேண்டிய வளம் என ஆய்வு செய்து சொற்பொழிவாக நிகழ்த்திய கட்டுரைகள் கையடக்கப் பிரதியாக வந்துள்ளது.மீன்களின் விற்பனை, பதப்படுத்தும் முறைகள், இவை சார்ந்த பிரச்னைகள் என எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் அழகு வெகு அருமை! சிறு நூலில் சிறந்த தகவல்கள்.

  • வெளியிட்டோர் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் அஞ்சல் பெட்டி எண்.8780, அடையார், சென்னை-600 020. மரபியல் வழி வந்த பண்பாட்டுப் பொருள்களைச் சீர் செய்தல், பாதுகாத்தல் ஆகியன மிக நுணுக்கமான பணிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியா போன்ற தொன்மையான நாடுகளில் அகழ்ந்தெடுக்கப்படும் பண்பாட்டுப் பொருள்கள் மற்றும் மரபியல் சார்ந்த தொன்மையான பொருள்களைப் பற்றிய ஆய்வு வேண்டப்படுவதாகும். இவற்றின் மூலமாக அறியப்படும் வரலாறு, பொருளியல், கலை நுணுக்கம், தொழில் நுணுக்கங்கள் ஆகிய பண்பாட்டுக் கூறுகள் சிறப்பானவை. இப்பொருட்களைச் சீரமைத்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றை முறையாகக் காட்சியில் அமைத்து காப்பு செய்தல் பண்பாட்டு ஆய்வாளர்கள் இடையேயும், அறிவியல் அறிஞர்களிடையேயும் முக்கியம் வாய்ந்த பயனீட்டுக் கல்வியாக மலர்ந்துள்ளது. இவ்வகையில், என்.ஹரிநாராயணா அவர்களின் இந்நூல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது கண்கூடு. இந்நூலை ஆக்கித் தந்தமைக்கு அவரையும், வெளியீட்டாளரையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்ட இந்நூலில், 46 ஆய்வுக் கட்டுரைகள் சுவையான ஆங்கிலத்தில் உள்ளன. அருங்காட்சியியல் பற்றிய அனைத்துச் செய்திகளும் முறையாகத் தரப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்களை அமைக்கும் முறைகள், அமைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பன்னாடுகளில் அருங்காட்சியியலில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகிய பல பொருள்கள் பற்றிய முக்கிய செய்திகள் நிறைவாகத் தரப்பட்டுள்ளன.பண்பாட்டுப் பொருள்களைச் சீரமைத்தலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வேதியியல் முறையில் சீரமைத்தல் தனிப் பிரிவாகும். வேதியியல் மேலறிவும், ஆர்வமும், பழம் பொருள் களின் தன்மை சிதைபடா வண்ணம் பாதுகாக்கும் எண்ணமும் முக்கியத் தேவைகள். சீரமைத்தலின் நுணுக்கங்கள் பற்றி விளக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் உள்ளன. பண்பாட்டுப் பொருள்கள் சீரமைத்தலின் வரலாற்று ஆய்வும் இந்நூலில் உண்டு. சீரமைத்தலின் நோக்கங்கள், தேவைகள், சீரமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சி பற்றியும் இந்நூல் விளக்குகிறது. அருங்காட்சியக வேதியியல் அலுவலர்களின் தகுதிகள், முக்கிய பண்புகள், கடமைகள் ஆகிய விவரங்கள் மிகச் சிறந்த பயனளிக்கும். தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய துறை ஆய்வாளர் களுக்கும் வேதி யியல் சீரமைப்பு முறைகள் நன்கு தெரிய வேண்டும் என்று அறிவுறுத்துவது பாராட்டத் தக்கது.தானே முன்னின்று சீரமைத்த பணிகள் பலவற்றை விளக்கி யுள்ளது இந்நூலின் மற்றுமொரு முக்கிய சிறப்பாகும். தஞ்சாவூர் கோவில் பண்டைய ஓவியங் கள், மரச் சிற்பங்கள், பனை ஓலைச் சுவடிகள், செப்புப் படிமங்கள், காகிதப் பொருள்கள் மற்றும் ஓவியங்கள் ஆகிய தொன்மைப் பொருள்களைச் சீரமைத்த முறைகளை விளக்கியுள்ளது மிக்க பயனுள்ளதாகும். இத்துறையைச் சார்ந்த பலருக்கும் இம்முறைகள் பற்றிய தெளிவான அணுகுமுறைகளை இந்நூல் தந்துள்ளது. பழங்காலக் கோவில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை வேதியியல் முறைப்படி சீரமைத்தலும் பாதுகாத்தலும் நிரல்பட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டியில் கிடைத்த ஈயக்காசு களைச் சீரமைத்து காப்பு செய்யப்பட்ட முறையும் சொல்லப்பட்டுள்ளது. சீரமைப்புக்கு தேவையான முக்கிய வேதியியல் பொருள்களின் பட்டியல், அளவுகள் ஆகியன தந்துள்ளமை, இப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக் கும் ஏனைய பொது மக்களுக்கும் மிகத் துணை புரியும்.அருங்காட்சியியல் மற்றும் வேதியியல் சீரமைப்பு, காப்பியல் ஆகிய துறைகளில் பணியாற்றுவோரிடையே மிகவும் நன்கு அறிமுகமானவர் ஹரிநாராயணா. சிறந்த பயிற்சிகளைப் பெற்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், தொன்மையானதுமான சென்னை அருங்காட்சியகத்தில் 30 ஆண்டுகளுக்கு

புதிய வெளியீடுகள்