Advertisement

கங்கை கொண்ட சோழன் (நாவல் – நான்கு பாகங்கள்)


கங்கை கொண்ட சோழன் (நாவல் – நான்கு பாகங்கள்)

₹ 1,630

எழுத்துரு அளவு:

ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்ற நாட்கள் இவை. அவரது வீர வரலாற்றை அற்புதமாகப் படம் பிடித்து, நம் கண்முன் நிறுத்துகிறார் பாலகுமாரன். தஞ்சையைப் போலவே ஜெயங்கொண்டம் அருகே புதிய தலைநகரையும், அங்கே தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற பிரமாண்ட புதிய சிவாலயம் ஒன்றையும் நிறுவுகிற முயற்சியில், ராஜேந்திர சோழன் ஈடுபட்டிருப்பதில் கதை துவங்குகிறது.கீழைச் சாளுக்கிய வேந்தன் விமலாதித்தனை மணந்திருந்த ராஜேந்திர சோழனின் தங்கை குந்தவை, அங்கு அவமதிப்புக்கு உள்ளாவதாகத் தகவல் அனுப்புகிறாள். அதை விசாரிக்கவும், மேலைச் சாளுக்கிய ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தி, தங்கை மகன் ராஜராஜ நரேந்திரனுக்கு வேங்கி அரியணை கிடைக்க வகை செய்யவும், சோழப் படையெடுப்பை நிகழ்த்துகிறார் ராஜேந்திரர்.வேங்கியை விழுங்க காத்திருக்கும் வேறுசில எதிரிகளையும் ஒடுக்கும் முகமாக, ஒட்டர, கலிங்க, கோசல, வங்க நாடுகள் மீதும் படையெடுப்பைத் தொடர வேண்டியதாக இருக்கிறது. இப்போர்களில் வென்று, கங்கை நீரையும் கொண்டு வந்து பொன்னேரியில் கலப்பதுடன், சிவபெருமானுக்கும் அபிஷேகம் செய்து மகிழ்கிறார். புதிய தலைநகர், ‘கங்கை கொண்ட சோழபுரம்’ எனப் புகழ் பெறுகிறது.வேங்கி மீது படையெடுப்பு, கலிங்கத்தை வென்றடிப்படுத்துவது, கங்கை வரை செல்லும் பயணத்தை தடுக்க முயலும் வடபுல வேந்தர்களை ஒடுக்குவது ஆகிய பயணங்களில் ராஜேந்திர சோழர், தரைவழியையும் கடல் வழியையும் பயன்படுத்தியே படை நடத்துகிறார்.மிகப்பெரிய கடற்படை அவரிடம் இருக்கிறது. யுத்தங்கள் காரணமாக அவை மேலும் நவீனப்படுத்தப்படுகிறது. பிரமாண்டமான மரக்கலங்கள் வாங்கப்படுகின்றன. ஸ்ரீவிஜயம், கடாரம், காம்போஜம், சாவகம் போன்ற தூரகிழக்கு நாடுகளில் வாணிபம் செய்யும் சோழ தேச வணிகர்கள், கடற்கொள்ளையர்களால் பெருந்துன்பங்களை அடைய நேர்கிறது.அந்த தேசங்களில் வந்து வாணிபம் செய்யும் சீன வணிகர்களுடன் நிகழும் வணிகப் போட்டிகளை வேறு சமாளிக்க வேண்டியதாக இருக்கிறது. சொல்லொணத் துன்பங்களை அடையும் சோழதேச வணிகர்களின் முறையீட்டின் பேரில், கடல் கடந்த நாடுகள் நோக்கியும் சோழதேசக் கடற்படை புறப்படுகிறது.ஸ்ரீவிஜயம், கடாரம் போன்ற தேசங்களில், சீனத்தில் இருந்து ஓடிவந்த போலி புத்த பிட்சுகள், அரசியலில் புகுந்து அதிகாரம் செலுத்துவதாகவும், ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்வதாகவும், மக்களிடையே மதப்பூசல்களை வளர்ப்பதாகவும், அங்குள்ள இந்துக்களை அடித்து கட்டாய மதமாற்றத்திற்கு உட்படுத்துவதாகவும் பல்வேறு சம்பவங்களை எடுத்துரைக்கிறது நவீனம்.சோழர் படையெடுப்பு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி பெறுகிறது. ராஜேந்திர சோழன் பல இடங்களில் நேரடியாக பங்குபெறுகிறார். யுத்தபூமியில் அவரே உலவுகிறார். கங்கை கொண்ட சோழனை, வெகு கம்பீரமாக நம் கண்முன் நிறுத்துகிறார் பால குமாரன். அவரை ஓர் அற்புதமான குடும்பத் தலைவனாகப் படைத்து, இப்புதினம் நெடுகிலும் உலவவிட்டிருக்கிறார்.ராஜேந்திர சோழரின் தங்கை குந்தவை, கீழைச் சாளுக்கிய மன்னன் விமலாதித்தனை மணந்து படுத்தும்பாடு, மாமன்னர் ராஜராஜ சோழரின் மகள் என்ற மமதையும் அகம்பாவமும் கொண்டு செயல்படும் விதங்களை வர்ணிக்கும் போது, இந்த சரித்திரப் புதினத்தை, ஓர் அருமையான சமூகப் புதினமாகவும் ஆக்கி விடுகிறார் பாலகுமாரன். மனித குணங்களை அலசி ஆராயும் அவருக்கே உரிய எழுத்து நடையில், சரித்திர கால மனிதர்களையும் சம்பவங்களையும் நம் கண்முன் படம் பிடித்துக் காட்டுகிறார்.சோழர் கால சமூக வாழ்வியலில், இரண்டு விஷயங்கள் எப்போதும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பேசப்படுவதுண்டு. ஒன்று, தளிச்சேரிப் பெண்டுகள் எனப்படும் பொதுமகள் வாழ்க்கை. இன்னொன்று, ஜாதி ஏற்றத் தாழ்வுகளால் ஏற்பட்ட வலங்கை – இடங்கைப் பிரிவு களின் பூசல்கள். இந்த இரண்டையும் மறைத்துவிடாமல், உள்ளது உள்ளபடி அப்பட்டமாகத் தமக்கே உரிய உள்ளார்ந்த நோக்குடன், கதைப் போக்கிற்குப் பொருத்தமான இடங்களில் எடுத்துரைக்கிறார்.ஆலயங்களில் பணிபுரிவது, கலைகள் வளர்ப்பது என்றிருக்கும் தளிச்சேரிப் பெண்களில் ஒருத்தியான பரவை நங்கைக்கு, ‘காதல் மனைவி’ என்ற சமூக அந்தஸ்தை வழங்கும் ராஜேந்திர சோழர், அந்தணர்களும் அறிஞர்களும் மதிக்கும் நிலையில் அவளை வாழ வைத்து, ‘பரவை நாச்சியார்’ என, மக்கள் அழைத்துப் போற்றும்படி செய்கிறார். எதிர்ப்புகளை மீறி, கருமார் எனப்படும் இரும்படிக்கும் கொல்லர்கள், பூணுால் அணிவதற்கு அனுமதி வழங்கி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துகிறார்.வணிகம், விவசாயம், சிற்பக்கலை, போர், காசு அடிப்பது, உணவு விவகாரம், உல்லாசம், மருத்துவம், பிறதேசங்கள், மக்களின் வாழ்வியல், சோழ தேசப் பெருமை என, ஒவ்வொன்றை விவரிப்பதிலும், பாலகுமாரனின் நுண்மாண் நுழைபுல ஆற்றல் பளிச்சிடுகிறது.இதுவரை எவரும் எழுதாத ஒரு தனிச்சிறப்பு நடையில் மிளிரும் சரித்திரப் புதினமான, ‘கங்கை கொண்ட சோழன்’ படைப்பில், பாலகுமாரனின் நகாசு வேலைக்கு ஒரு சான்றாக, தஞ்சையிலிருந்து சாளுக்கிய தேசம் நோக்கிப் படைகள் புறப்படும் காட்சியின் வருணிப்பைச் சொல்லலாம். தொண்டை மண்டல வேளார் குலத்தின் சிறந்த தலைவனாக விளங்கும் சீராளன், திருமயிலையில் வாழ்கிறான். சாளுக்கியப் படையெடுப்பின்போது, வீரர்களுக்கு தேவையான உணவு தானியங்கள் சேகரிப்பு குறித்து பேச அவனை அழைக்கிறார் ராஜேந்திர சோழர். அவன் தஞ்சை சென்ற சமயம், சாளுக்கியப் படை ஒன்று, கள்வர் கூட்டம் போன்று திருவொற்றியூர் வழியே திருமயிலையைச் சூறையாட வருகிறது.அந்த எதிரிகளுடன் போராடி, வெற்றி கண்டு, தன் இன்னுயிரைத் தியாகம் செய்கிறாள், சீராளன் மனைவி தாமரைச் செல்வி. அவள் தியாகத்தை, வீரத்தை மெச்சி, அவளுக்கு நடுகல் எழுப்பி வழிபடுகின்றனர் மயிலை மக்கள். அந்த நடுகல் ஆலயமே, முண்டகக்கண்ணி அம்மன் கோவில் என்று, ஒரு புதிய வரலாற்றுப் புனைவையும் இப்புதின வாயிலாகப் பதிவு செய்கிறார் பாலகுமாரன்.இறுதியில், பிரம்மதேசத்தில், ராஜேந்திர சோழர் யானை மீதிருந்து கீழே விழுந்து, உயிர் துறக்க நேர்கிறது. அவருடைய சிதையில் வீழ்ந்து பிராணத்தியாகம் செய்கிறாள் வீரமாதேவி என்று, ‘கங்கை கொண்ட சோழன்’ புதினம் நிறைவு எய்துகிறது. கண்கள் அருவியென நீர்பொழிய, கனத்த நெஞ்சுடன் கனவு கலைந்து, நிகழ்காலத்தினுள் பிரவேசிக்கிறோம் நாம்.– கவுதம நீலாம்பரன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 48)."நான் யார்' என்ற கேள்வி எளிதாகத் தோன்றினும், புராணகால நதிகேசன் முதற்கொண்டு சுவாமி விவேகானந்தர் வரையிலான பேரருளாளர்கள் யாவும் உரிய விடை காண இயலாது தத்தளித்து வந்திருக்கின்றனர். பகவான் ரமணரும் இதற்கு விதிவிலக்கல்ல! "நான்' எனும் மூலத்தை தேடும் வேட்கையில், பரமாத்ம சொரூபமும், நமது ஆத்ம சொரூபமும் ஒன்றே என மெய்யாகக் கண்டுணர்ந்த மாமுனிவர், இந்த "சத்-சித்-ஆனந்தம்' எனப்படும் நித்திய ஆனந்த நிலையை அடைந்திடும் நெறிமுறைகளை அருளுரைகளாக உலகினர் உய்யும் பொருட்டு வழங்கியுள்ளார். சுருக்கமாக, இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் நன்கு புலப்படும்போது ஒவ்வொருவரும் பண்பட்ட மாமனிதராக, ஞானியாக வழிகோலுகிறது! ஆன்மிக ஆர்வலர்களுக்கு சிறந்த சிறியதோர் கையேடு.

  • நக்கீரன் பதிப்பகம், 106/4, ஜானி ஜான்கான் தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 120).மக்கள் குடியரசுத் தலைவராக மலர்ந்து மணம் பரப்பிய அப்துல் கலாம் பற்றிய அரிய குறிப்புகளும், அவரது சிந்தனை வளம் மிக்க அறிவுரைகளும் ஆக 100 செய்திகளைத் திரட்டி சுவையுடன் படைத் துள்ளார் நூலாசிரியர்.புத்தகம் நிரம்ப ஒளிப்படங்கள் மிளிர் கின்றன. "நக்கீரன்' நிறுவனத்தின் தயாரிப் பாக மிக நல்ல தரத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்நூல் ஒவ்வொருவர் மனத்திலும் கரத்திலும் இருக்க வேண்டிய தகுதி மிக்கது. நல்ல கருத்துக்களைக் கொண்ட சிறந்த புத்தகங்கள் கனவுகளை வளர்க்கும் கனவுகள் சிறந்த எண்ணங்களை உருவாக்கும். உயர்ந்த எண்ணங் கள் செயல்களை உருவாக்கும் கலாம் நூலில் ஒன்று இது.

  • கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 168). புத்திசாலித்தனமான போர் உத்திகளின் மூலம் ஒரு நாட்டை ஜெயிப்பது சுலபம். ஆனால், அந்த வெற்றி நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூர் மக்கள் நம்மை ஆக்கிரமிப்பாளர்களாக நினைக்காமல், அன்பான நண்பர்களாக நினைக்க வேண்டும் (பக்.80) என்று வலியுறுத்திய நெப்போலியன், "மன்னராட்சி வேண்டாம் என்று வருடக் கணக்காகப் போராடி ஜெயித்து, அதே காரணத்துக்காக ஏகப்பட்ட நாடுகளைப் பகைத்துக் கொண்டு, கடைசியில் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தின் பேரரசாக முடிசூட முடிவெடுத்தார் (பக்.120).போப் ஆண்டவருக்கு முன்னால் தலை குனிந்து வணங்குவதை விரும்பாத நெப்போலியன், அவரிடமிருந்து கிரீடத்தைக் கிட்டத்தட்ட பறித்துக் கொண்டதாகவும், தானே தனக்கு முடிசூட்டிக் கொண்டதாகவும் குறிப்புகள் இருக்கின்றன (பக்.124).அடிமட்டத்திலிருந்து வெற்றியின் உச்சத்திற்கு வேகமாகச் சென்று உயர்ந்த மாவீரன் நெப்போலியன், பிறகு தோல்விகளின் பாதாளத்தையும் தொட்ட வரலாற்றை மிகவும் சுருக்கமாகவும் எளிய நடையிலும் ஆசிரியர் விவரித்துள்ளார். நெப்போலியன் வரலாற்றை கதைபோல விறுவிறுப்புடன் படிக்கும் வகையில் அமைந்த அழகிய படைப்பு.

  • சுரா பதிப்பகம், 1620, "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 114). பாரதியார் வரலாறு, பாரதி பாடல்கள் நமக்கு தண்ணீர் பட்ட பாடு. ஆசிரியர் வித்தியாசமாக பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சுவையான 98 சம்பவங்களைக் கூறியுள்ளார். பாரதி அன்பர்களுக்கு மிகவும் பிடிக்கும். எல்லாருக்கும் தான். ஆசிரியரின் முயற்சி பாராட்டுக்குரியது.

  • கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). பனித் திரை, உலகை மூடியிருக்கும் மார்கழி மாத அதிகாலை நேரத்தில், பாகவதர் பாடும், பக்திப் பாடல்களைக் கேட்டால் முதுகுத் தண்டு சிலிர்க்கும். ஆனந்த பரவச நிலை சித்தரிக்கும்.""பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா!'' என்று பாடினார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை."பக்திப் பாட்டுக்கு ஒரு பாடகர் எம்.கே.டி.,!' என்று நாம் சற்றும் தயங்காமல் சொல்லி விடலாம்! கேட்பவர் செவிகளில் தேன் பாய்ச்சும் தங்கக் குரல் வேந்தர்! கந்தர்வ கான ஏழிசை மன்னர்!அந்த மகா கலைஞனின் வாழ்க்கையில் நேர்ந்த இன்ப அதிர்வுகளையும் இன்னல் தந்த சரிவுகளையும் - மனம் உருகச் சொல்லும் அற்புத நூல்!ஜெ.ராம்கியின் தனிப் பெரும் சாதனை.

  • நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128). விண்வெளி வீராங்கனைகளான கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரை பற்றியும் அவர்களது கதைகள் பற்றியும், அவர்கள் சாதித்த விதத்தையும் தொகுத்து அளித்துள்ளார் நூலாசிரியர்.

  • மா.சுந்தரமூர்த்தி, 6, சீத்தாராம் நகர், நெய்வேலி மெயின் ரோடு, வடலூர் - 607 303. முன்னுரையில் ஆசிரியர், புத்தகத்தின் முக்கியத்துவத்தை ஒழுக்கத்திற்கும், பண்புக்கும், குற்றமற்ற தன்மைக்கும் விளக்க எழுதப்பட்டது எனக் குறிப்பிடுகிறார். மொத்தம் 61 தலைப்புகளில், திருக்குறள்கள் மூலம் எளிய முறையில் வாழ்வியலை விளக்குகிறார். கடவுள் யார்? என்று ஆரம்பித்து அகமும் புறமும் அறிதல் என்பதை விளக்கி, மனித உடலையும், உயிரையும் பற்றிக் கூறி, மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் எப்படி வாழ்வது என்பதை விளக்குகிறார். வெவ்வேறு மனித உணர்ச்சிகளையும், அதற்கேற்ற குறள்களின் மூலம் விளக்கி தாழ்வு மனப்பான்மையை நீக்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். வெளிமனது, உள் மனது இவற்றை அறிவியல் ரீதியாக விளக்கி மனஅழுத்தம், மனப்பதட்டம் இவற்றை நீக்கும் முறைகளையும் விளக்குகிறார். தான் யார் என்ற வினாவிற்கு பல வகைக் கேள்விகள் மூலம் விடை கண்டறியும் விதத்தைக் கூறியுள்ளது, மனோதத்துவ நிபுணர்கள் கூறும் விதங்களை ஒத்துள்ளது. தியானத்தைக் கற்பது எளிது என்று கூறி குறள்கள் மூலம் உதாரணங்கள் குறிப்பிட்டு தியானத்தின் பயன்களை விளக்குகிறார். முதியோர்கள் மற்றும் மாணவர்கள் இவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடர்ப்பாடுகளை நீக்கும் வழிகளையும் குறிப்பிட்டிருப்பது புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.

  • நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144). இந்து மதத்தின் துடிப்புடன் கூடிய ஆன்மிக விடிவெள்ளி விவேகானந்தர். குறுகிய காலத் தில் துடிப்புடன் நிகழ்த்திய பெரும் சாதனை பாரதத்தின் தவப்பயன்.கடவுளுடன் பேச முடியுமா, முளையிலேயே பிரகாசம், ஆன்மிக ஆர்வம், துறவித் தோன்றல், விவேகானந்த விசுவரூபம், அமெரிக்காவில் ஆன்மிக முழக்கம் என 42 பக்கங்களில் ஆறு தலைப்புகளில் விவேகானந்தரின் வாழ்க்கையை ரத்தின சுருக்கமாக ஆசிரியர் கூறியுள்ளார்.ஏழாவது தலைப்பில் விவேகானந்தரின் 200 மணிமொழிகளை ஆரமாகக் கோர்த்து வாசகர்களுக்கு புத்துணர்வு புதுத் தெம்பு ஊட்டும் புத்தகத்தை ஆசிரியர் படைத்துள்ளார். மனம் ஒன்றி படிக்கும் வாசகர்களுக்கு நல் முடுக்கத்தையும், விழிப்புணர்வையும் நிச்சயம் தரும்!

  • சுரா புக்ஸ், 1620 "ஜே' பிளாக், 16வது பிரதான சாலை, சென்னை-40. (பக்கம்: 154) மாவீரன் பகத்சிங் முதல், கவி ரவீந்திரநாத் தாகூர் முடிய 11 தேசத் தலைவர்களின் பயனுள்ள வாழ்க்கை வரலாறு நூலில் இடம் பெற்றுள்ளது.சிறுவர், சிறுமியர்கள் விடுமுறையில் இந்நூலைப் படித்து, தேசபக்தியை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும்.

  • கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, சென்னை -600 017. (பக்கம்: 160) "இது சாதாரணக் குழந்தை இல்லை... தெய்வாம்சம் பொருந் திய குழந்தை. ஏழு தலைமுறைக்கு நம்ம குடும்பத்திற்கு பேரும் புகழும் வாங்கித் தரப் போற குழந்தை இது. இவன் உடம்பில் ஓடறது ரத்தம் இல்லே... சங்கீதம்! இப்படி உலகம் முழுக்கப் புகழோடும் பேரோடும் வாழப் போற ஒரு குழந்தையைப் பெற்றுத் தரத்தான் நான் பிறந்தேன்' (பக்:57) என்று தன் தாயாராலும், "ஐந்து வயதில் ராகத்தைக் கண்டுபிடிக்கும் ஞானமும், தாள லயமும், ஏழு வயதில் கச்சேரி செய்யும் அளவுக்கு வித்வமும் பாலமுரளிக்கு வாய்த்துவிட்டன' (பக்:19) என்று குருவாலும் புகழப்பட்ட கருவிலே திருவுடைய இசைமேதையின் வாழ்க்கை வரலாற்றை தனக்கே உரிய "தங்க ரத' நடையில், வெற்றியுலா வரச் செய்துள்ளார் ராணி மைந்தன். ஜூலை., 6, 1930ல் பிறந்து, இசை பயின்று, முதன் முதலாக 72 மேளகர்த்தாக்களில் முதல் ராகமான கனகாங்கி ராகத்தில் கீர்த்தனையைத் தொடங்கி புதுப்புது கீர்த்தனைகளைப் பாடி, இசைக்கல்லூரியின் முதல்வராகி, சென்னைக்கு வந்து இசைமேதையாகி, சரஸ்வதி கடாட்சத்துடன் இசையுலகின் உயரிய விருதுகள் அனைத்தும் பெற்று இன்று அமெரிக்காவிலும் பாராட்டைப் பெற்று விளங்கும் சங்கீத சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி பால முரளி கிருஷ்ணாவின் இவ்வரலாற்று நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களும், அமைப்பும் நூலுக்கு மெருகூட்டுகின்றன. பாலமுரளியின் சங்கீதத்தைப் போலவே இந்நூலும் மனநிறைவை அளிக்கக்கூடிய சுவைமிக்கது.

  • நிவேதிதா பதிப்பகம், 1, மூன்றாவது மாடி, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. (பக்கம்: 96).திபெத் நாட்டை சீன கம்யூனிஸ்ட் அரசு ஆக்கிரமிக்க முற்பட்டபோது திபெத்தின் பவுத்த வம்சாவளி மத குருவான தலாய் லாமா, சீனர்களின் துரத்தலில் இருந்து தப்பிக்க, இமயமலை வழியே, இந்தியாவுக்குள் புகுந்த வீர தீர சாதனையை சுவைபட எழுதியிருக்கிறார் ஆசிரியர். படித்து இன்புறலாம்.

  • பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 84).நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்காக ஏறத்தாழ இதுவரை 63 தலைப்புகளில் தலைச்சிறந்த தமிழ் இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர்களை வைத்து எழுதி வெளியிட்ட பெருமைக்குரிய பதிப்பகம் பழனியப்பா. அந்த வரிசையில் ஆசிரியர் கள்ளிப்பட்டி குப்புசாமி, மருது சகோதரர்களைப் பற்றிய வரலாற்றுச் சான்றுடன் கூடிய அற்புதமான நூலை இப்பதிப்பகத்திற்காகப் படைத்துத் தந்துள்ளார். குறிப்பாக முதியவர்கள், மாணவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமல்லாது குழந்தைகளும் நன்கு புரிந்து தெரிந்து கொள்கின்ற அளவுக்கு எளிய தமிழில் சுவையான நிகழ்வுகளை தந்திருப்பது ஆசிரியரின் எழுத்தாற்றலை இதில் காண முடிகிறது.சிவகங்கைச் சீமை எனத் துவங்கி, பெரிய மருதுவின் வீர உரை என 22 அத்தியாயங்களின் ஒரு சில கோட்டுருப் படங்களுடன் அழகுற உயரிய தாளில் பிழை இல்லாது அச்சாகித் தந்திருக்கின்றனர். ஒவ்வோர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு வரலாற்று ஆவணம்.

  • அறிவு நிலையம் பதிப்பகம், 32/107, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்.208).தற்காலச் சிறைச்சாலைகளில், அதிகாரிகளின் ஆசிகளுடன் தாதாக்கள் கோலோச்சி வருவதையும், "ராஜ மரியாதைகள்' யாவற்றையும் அனுபவித்து வருவதையும் நாளேடுகள் வாயிலாக நாம் நன்கு அறிவோம். மாறாக, கொடுங்கோல் ஆட்சியாளர்களால், விடுதலைப் போராளிகளும், தியாகச் செம்மல்களும் சிறைகளில் சித்ரவதைக்குட்படுத்தப்பட்டு வெந்து, சாம்பலானவர்களும், உயிர் நீத்தவர்களும் கணக்கில் அடங்கா. இந்தச் சிறியதோர் நூலில் 30 கட்டுரைகள் வாயிலாக, சரித்திரம் சுட்டிக்காட்டிடும், வீர தீரச் செயல்கள் புரிந்த மாவீரர்களை நாம் சந்திக்கும் வாய்ப்பை பெறுகிறோம். சுவைமிகு செய்திகளில் சில. இரட்டை ஆயுள் தண்டனையை ஏற்று வ.உ.சி.,யும், பத்தாண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்ற சக தேச பக்தர் சிவாவும், வெள்ளைக்கார நீதிபதியைப் பார்த்து அலட்சியமாகப் புன்முறுவல் பூத்தனராம் (பக்.16).நெஞ்சம் மறக்க இயலாத வீர - தீரர்களின் வரலாற்றுப் பெட்டகம் இந்நூல்.

  • அநுராகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 64). மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் அதன் நிறுவனர் திரையுலகிற்கு செய்த சேவை மறக்க முடியாத ஒன்று.அறந்தை மணியன் ஒவ்வொரு தகவல்களாக திரட்டி சிறிய புத்தகத்தில் பெரிய சரித்திரத்தை குறையின்றி சொல்லியுள்ளார்.எவ்வளவு பேர் புழங்கிய அந்த இடம் இன்று குடியிருப்புகளாகி உள்ளதை படிக்கையில் மனம் வேதனைப்படுகிறது.

  • கவிதா பப்ளிகேஷன் , தபால் பெட்டி எண் : 6123 , 8 . மாசிலா மணி தெரு , பாண்டி பஜார் , தி.நகர் , சென்னை - 600 017.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.

  • கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.தமிழ்நாட்டில் எப்பேர்ப்பட்ட மிகச் சிறந்த மேதைகள் தோன்றியிருக்கிறார்கள் என்பதற்கு சீனிவாச ராமானுஜன் ஓர் உதாரணம்.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.

  • நேதாஜி பிரசுரம், 56/92, அகிம்சாபுரம் 7வது தெரு, செல்லூர், மதுரை-2.பக். 224.பழைய வரலாறுகளைப் படிப்பதால், நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதோடு, ஒரு நாட்டின் வரலாற்றை புரட்டிப்போட்ட சம்பவங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று நாயகர்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் வாழ்க்கை பாதையில் சந்தித்த இன்னல்களும், அதை அவர்கள் சமாளித்த விதமும், நமக்கு நல்ல பாடமாக அமைந்து, நம் பாதையை செம்மைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.இந்நூலில், 26 தலைப்புகளில் பாபர், அக்பர், சத்ரபதி சிவாஜி, நூர்ஜஹான் முதல் நேரு, படேல், ராஜாஜி, காமராஜர் என பல தலைவர்களைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.

புதிய வெளியீடுகள்