Advertisement

பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 16)


பார்த்தது கேட்டது படித்தது! (பாகம் – 16)

₹ 290

எழுத்துரு அளவு:

அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு...சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உங்கள் பணி தொடர்வது பாராட்டுக்குரியது!அந்த வகையில் என்னைப் போன்ற படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏமாற்றும் போலியான, ‘கன்சல்டன்சி’ நிறுவனங்கள் பற்றி தங்கள் மூலம் இளைஞர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று ஓர் இளைஞர், அந்த போலி நிறுவனம் பற்றி அந்துமணிக்கு விரிவான கடிதம் எழுதுகிறார்.இப்படி பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களை பாதித்த பிரச்னைகள், மற்றவர்களை பாதித்துவிடக்கூடாது என்பதற்கான கருவியாக, அதைத் தடுக்கும் ஆற்றல் மிக்கவராக அந்துமணியை கருதி, அவரிடம் தங்கள் பாரத்தை, கவலையை, நம்பிக்கையுடன் இறக்கி வைக்கின்றனர்.அந்த நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக, அவரும் எழுத்தில் மட்டுமின்றி, களத்திலும் இறங்கி சடுதியில் பிரச்னையை களைகிறார். காரணம், வாசகர்களே தன் முதலாளிகள் என்று அவர் கருதுவதால்! அதை, இந்த புத்தகத்தின் பல இடங்களில் சுட்டிக் காட்டியும் உள்ளார். இன்று வரை அதில் இருந்து இம்மியும் பிசகாமல் இருந்தும் வருகிறார்.எப்போதுமே மருந்து கசக்கும்; ஆனால், அது தான் நன்மை செய்யும். அது போலத் தான் ‘தினமலர்’ நாளிதழும்! உண்மையான களநிலவரத்தை சொல்லும் போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு கசக்கத் தான் செய்யும்; ஆனால், கொஞ்ச நாளில் உண்மையின் தன்மை உணர்ந்து ‘தினமலர்’ நாளிதழை பாராட்டுவர். இது தொன்று தொட்டு வருவது தான்.ஆசிரியர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அரசுக்கு தங்கள் கோரிக்கையை சொல்வதற்கான மேடையாக தினமலர் நாளிதழ் அதிகம் பயன்படும். காரணம், கோரிக்கை வைப்பவர்களுக்கு தெரியும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருமே தினமலர் நாளிதழ் தவறாமல் படிப்பர் என்று! ஆனால், அதே நேரம் அவர்கள் தங்கள் கடமையில் இருந்து வழுவினால், அதாவது, மருத்துவர்கள் நோயாளிகளை கவனிக்காமல் போராடினாலோ, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் போராடினாலோ, அரசு ஊழியர்கள் தங்களை கடமையைச் செய்யாமல் போராடினாலோ, அதையும் தினமலர் மட்டுமே கண்டிக்கும். இதை, ஒரு சம்பவம் மூலமாக அந்துமணி அருமையாக விளக்குகிறார்.விடலைப்பருவ மாணவியரை எப்படி போதை மாத்திரை கொடுத்து பழக்கி, பாழாக்குகின்றனர் என்ற விஷயத்தை படித்ததும் மனம் பதறிப் போனது. பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.இப்புத்தகத்தில் நிறைய நீதிக் கதைகள் சொல்லியிருக்கிறார்; சதி செய்பவன் அதே போன்ற சதியில் மாட்டிக் கொள்வான் என்ற நீதியை முன்வைத்து சொன்ன, ‘நாவிதர்கதை’ இது வரை யாரும் சொல்லாதது; எங்கேயும் படிக்காதது; வெகு சுவாரஸ்யம்!வெளிநாட்டு பயண செய்தி என்றால், அந்துமணிக்கு அல்வா சாப்பிடுவது போல! அவ்வளவு இனிமையாக, எளிமையாக கொடுப்பார். இந்த புத்தகத்தில் இலங்கை பயண செய்தியை கொடுத்துள்ளார்; அதில் ஒரு புதுமையையும் செய்துள்ளார். அது, ‘தான் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, காற்றை நன்கு உள்ளிழுத்து சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், கூப்பிடு தொலைவில் இருந்த டீ கடைக்கு நகர்ந்தேன்...’ என்பது போன்ற இழுவையான, இதர பயண எழுத்தாளர்கள் போல அல்லாது, வாசகர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும், ‘டிட் பிட்ஸ்’ போல தொகுத்து தந்துள்ளார். இன்றைக்கு சேனல்கள் அனைத்தும் போட்டி போட்டு ஒளிபரப்பும், ‘விரைவுச் செய்திகளுக்கான’ அச்சாரம், அந்துமணியின் இந்த சுருங்கச் சொல்லும் செய்திகள் தான் என்பதில் இரண்டாவது கருத்து கிடையாது.அதே போல மாணவன், ஆசிரியர், மாணவி மற்றும் தாய் ஆகியோர் பயணம் செய்த ரயில், ஒரு குகைக்குள் நுழைந்த போது கன்னத்தில் அறை வாங்கும், ‘பளார்’ ஒலியும், பின், ரயில் குகையை விட்டு வெளியே வந்தபோது நடந்த சம்பவத்தையும் மையப்படுத்தி, இன்றைக்கும் நிறைய நகைச்சுவை கதைகள் பின்னப்படுகின்றன. ஆனால், இந்த கதைகளுக்கு மூலம் நம் அந்துமணி தான் என்பதை இந்த புத்தகம் நிரூபணம் செய்கிறது. இதே போல நிறைய நகைச்சுவை விஷயங்களை எழுதி வாசகர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கிறார்.போலி சாமியார், போலி ஜோதிடர் போன்றவர்களை தோலுரிப்பது என்பது அந்துமணிக்கு கைவந்த கலை. அவர்கள் செய்த சில்மிஷங்களை எல்லாம் விலாவாரியாக எழுதி, வாசகர்களை மட்டுமின்றி போலிகளையும் எச்சரிக்கை செய்கிறார்.அமெரிக்க மாப்பிள்ளை என்றால், பெற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு தங்கள் பெண்ணை மணமுடித்துக் கொடுத்துவிட்டு படும் அவஸ்தையை, பல்வேறு உண்மை சம்பவங்களுடன் எடுத்துச் சொல்லி, பெண்ணைப் பெற்றவர்களை மட்டுமின்றி, மண வயதில் உள்ள பெண்களையும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கிறார்.பத்திரிகை படிக்கும் பலருக்கும், பத்திரிகை எப்படி அச்சாகிறது என்பது தெரியாது; அவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக அருமையாக விளக்குகிறார்; அதே நேரம் வாசகர்களுக்கு தினமலர் நாளிதழை தரமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக வாங்கப்பட்ட புது மிஷின் பற்றியும் விவரிக்கிறார். இதழியல், அச்சுக்கலை பிரிவு படிக்கும் மாணவர்கள் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.மத்திய அரசின் பட்ஜெட் எப்படி தயாராகிறது என்பதை எழுதியிருக்கிறார். சாப்பிடும் தட்டில் பட்ஜெட் ரகசியத்தை கசியவிட்டு விடுவர் என்பதால், ஒரு முறை சாப்பிட்டு அழித்து விடும் தட்டைத் தான் உபயோகிப்பர்; பட்ஜெட் தயாரிக்கும் நாட்களில் உண்ணுவது, உறங்குவது எல்லாமே ஒரு வளாகத்திற்குள் தான் என்பது போன்ற ஆச்சரியமான தகவல்களை எல்லாம் சொல்லிவிட்டு, அதைவிட ஆச்சரியமாக, இதுவரை ஒரு முறை கூட பட்ஜெட் ரகசியம் கசிந்தது இல்லை என்ற தகவலையும் சொல்லி, பட்ஜெட் தயாரிப்பில் இருப்பவர்களை பாராட்டவும் செய்கிறார்.தமிழை சுத்தமாக பேசுகிறோம் என்ற பெயரில் சோப்பை, ‘வழலைக்கட்டி’ என்று உச்சரிக்க கட்டாயப்படுத்தி, தமிழில் பேச நினைக்கும் குழந்தைகளை பயமுறுத்தாதீர்கள் என்று அரசியல்வாதிகளை கேட்டுக் கொள்கிறார்.அவ்வைப் பாட்டிக்கு அடுத்தபடியாக, நெல்லிக்கனியின் குணாதிசயத்தை சொல்பவர் அந்துமணியாகத் தான் இருக்கும்; ஆயுர்வேத சிகிச்சையில் அது செய்யும் மாயத்தை சொல்லியுள்ளார். அது, ஹீமோகுளோபின் குறைபாடுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாகும்.வாசகர் ஒருவர் வேறு வழியின்றி தமிழ் சீரியல் பார்த்ததாகவும், அது இவ்வளவு தரம் தாழ்ந்து விட்டதே என்றும், மகாபாரதத்திற்கு ஒரு சகுனி தான், ராமாயணத்திற்கு ஒரு கூனி தான்; ஆனால், தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் வரும் எல்லா பாத்திரங்களுமே சகுனியாக, கூனியாகவே இருக்கின்றனர்; கொஞ்ச நாள், இத்தொடர்களை பார்த்தால் போதும்; நானும் மன நோயாளியாகி விடுவேன் என்று கண்ணீர் வடிக்கும் அவ்வாசகர், முத்தாய்ப்பாக ‘டிவி’யை நேரந்தின்னி பேய் என்றும் விவரிக்கிறார்.உட்கார்ந்து சாப்பிட நேரமில்லாமல் நின்று கொண்டே சாப்பிடும் கலாசாரம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், உணவை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை, ‘ஆச்சாரக்கோவை’ என்ற புத்தகத்தில் இருந்து திரட்டி தந்துள்ளார், அந்துமணி. படிக்கும் போது தான் தெரிகிறது, உணவை உண்ணும் விதத்தில் எவ்வளவு தவறு இருக்கிறது என்று!கடந்த 1789ல் துவங்கப்பட்ட பம்பாய் லைப்ரரியில், இந்தியர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அதை எப்படி படிப்படியாக உடைத்து, இன்று வீட்டிற்கு ஒரு நுாலகம் வைக்குமளவிற்கு நாம் முன்னேறி உள்ளோம் என்பதை நுாலக வரலாற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல். இது போன்ற அறிவு பூர்வமாக தகவல்கள் தருவதால் தான், வாசகர்கள் அந்துமணியை கொண்டாடுகின்றனர்.நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர்வேலாயுதம், தொழில் அதிபராக மாறுவதற்கு முன் பட்ட கஷ்ட நஷ்டங்களை திரட்டி தந்துள்ளார், அந்துமணி. தொழில் செய்து முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள தகவலாகும். அதே போல நகைச்சுவை நடிகர் சந்திரபாபு, வறுமையின் காரணமாக விஷம் குடித்து இறக்கும் தருவாய்க்கு சென்று மீண்ட கதையையும் இப்புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.பல காலமாக ஊடகங்களில் தலாய் லாமா என்பவரைப் பற்றி படித்திருக்கிறோம்; லாமா ஒருவரை கைத்தாங்கலாக அழைத்து வருவதை படமாகவும் பார்த்து இருக்கிறோம். ஆனால், இந்த தலாய் லாமாவிற்கு பின்னணியில் உள்ள படு சுவாரசியமான தகவலை, இந்த புத்தகத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.இதோ இன்னும் சில நாளில் பள்ளிக்கூடங்கள் திறக்கப் போகின்றன; பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறார், ஆசிரியர் ஒருவர். பள்ளிப்பருவம் என்பது போட்டி போடும் இடமல்ல; அது ஓர் இனிமையான பயணம்; குழந்தைகள் விருப்பத்தோடு செல்லுமிடமாக பள்ளிகள் இருக்க வேண்டும். பிஞ்சு மனதை அன்பிற்கு ஏங்கவிடாமல் பாசமும், பரிவும் அளித்து போஷிக்கும் இடமாக இருக்க வேண்டும்.வகுப்பறைகள் பாடங்களை மட்டுமின்றி நிஜ உலகையும் போதிக்க வேண்டும். ஒப்பீடு என்பது அறவே கூடாது; பள்ளிகள் என்பது இறைவனின் தோட்டம்; இங்கே குழந்தைகள் என்ற வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க வேண்டுமே தவிர, ஒரு போதும் வாடி விடக்கூடாது; வாட விடக்கூடாது என்று கூறும் அந்த ஆசிரியரின் எண்ண ஓட்டத்தை நமக்கு பகிர்ந்தளித்துள்ளார் அந்துமணி. இளகிய மனமும், கருணையும், அன்பும், பாசமும் நிறைந்து வழியும் மனதில் தான் இத்தகைய எண்ணம் இருக்கும்; எழுத்தாய் மலரும்... அது, நம் அந்துமணியிடம் மட்டுமே வற்றாத சுனையாக இருக்கிறது!– எல்.முருகராஜ்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 112).புகழ் மிக்க இஸ்லாமியர் பெருமக்கள் வரலாறுகளிலிருந்து அவர்களது தூய்மை, மதிநுட்பம், வீரம், தியாகம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை போன்ற மிக உயரிய பண்புகளைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைக் கட்டுரை வடிவில் சுவையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சன்னை-02. (பக்கம்:222)ஜூனியர் விகடன் இதழில் ஜென்ராம் எழுதிய 47 செய்தி விமர்சனக் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 196). இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும்,"கடி தோச்சி மெல்ல' உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.

  • புதுச்சேரி வரலாற்று சங்கம், 86, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 312).புதுச்சேரி, வரலாற்று நாயகர்கள், புலவர்கள், இலக்கியம், காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர், என்ற தலைப்புகளில் ஆற்றிய பேருரைகள் 52 கட்டுரைகளாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் மணி மணியான கட்டுரைகள். ஆழ்ந்து வாசித்து அசை போட வேண்டியவை. குறிப்பாக "புதுவையில் பாரதி' என்ற கட்டுரையின் இறுதியில் "புதுவை அந்தப் பாட்டுப் பறவையை (பாரதி) பத்தாண்டுகள் பாதுகாத்துப் படைப்பிலக்கியம் பல படைக்கச் செய்தது. பறந்து சென்ற மூன்றாண்டுகளில் (பாரதி மீண்டும் தமிழகம் வந்து) அதன் சிறகொடித்துச் சாகடித்து தமிழ்நாடு' என்ற வரிகள் தமிழர் நெஞ்சை கனக்கச் செய்யும்.

  • ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 190)."சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று முன்பு விளங்கியது. அரசியலில் மட்டும் அன்று; கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலும் தான். சமணர் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று மொழி அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது.கொல்லாமை, புலால் மறுத்தல், பிறரைத் துன்புறுத் தாமை, சமூக சமத்துவம், பெண் சமத்துவம், சமய சகிப்பு, கல்வி வளர்ச்சி, தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சி ஆகிய இந்தத் தடங்களில் தமிழகத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் முன்னேற்றியது சமணம் என்பதை இந்நூலின் கட்டுரைகள் சான்றுகளுடன் சாதிக்கின்றன.சிந்து சமவெளி நாகரிகம் சமணமே என்றும், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நீலகேசி முதலிய தமிழ் இலக்கியங்கள் சமண இலக்கியங்களே என்றும் உறுதி செய்கிறார். எண்குணத்தான், ஐந்து அவித்தான், இருள் சேர் இருவினை, போன்ற குறள் பகுதிகளுக்குச் சமணத்திலிருந்து விளக்கம் தந்துள்ளார்.பள்ளிக்கூடம் என்று இன்றும் நாம் அழைக்கும் கல்விச் சாலையின் பெயரை தந்தது சமணம். சைன மதத் துறவியர் இருந்த இடமே "பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன. அங்கிருந்து அவர்கள் கல்வி தானம் செய்ததால் தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது. சமணராகிய தமிழ் ஜைனர்களின் மதச் சடங்குகள், கலை வளர்ச்சிகள், பண்பாடு ஒழுக்கங்கள், இவை இன்று நம் கண் முன் வாழும் வடநாட்டு வட்டி வாங்கும் சேட்டுகளாகிய ஜெயின்களிடமிருந்து மாறுபட்டது. தமிழுக்கே உரித்தான தமிழ்ச் சமணத்தின் பழமையும், பெருமையும் இந்த நூலைப் படித்தால் உணர்ந்து போற்றலாம்.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.

  • தமிழாய்வு: கடந்த காலமும் வருங்காலமும் என்னும் பொதுப் பொருளில் நிகழ்ந்த முதன் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. (ஒவ்வொன்றும் 256 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ.80) மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்-608 001.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து நிறுவியுள்ள கல்விசார் அமைப்பு தமிழாய்வு மன்றம், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் கருத்தரங்கக் கட்டுரைகள். அவற்றைத் தொகுத்து "ஆய்வுகளாக ஐந்து தொகுதிகளாக உருப் பெற்றிருக்கிறது.தமிழிலும் ஆங்கிலத்திலும் 460 ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லா தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை அளித்து அசத்தி விட்டனர் ஆய்வாளர்கள்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை மாணவர்கள் பன்னாட்டு மாணவர்களைக் கொண்டு மாணாக்கர்களுக்கு நடத்தும் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒளிவீசும் மணிக் கதிர்களின் அணிவகுப்பாக அழகுற வருகிறது இந்த ஆய்வுக்கதிர்- என சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் வ.ஜெயதேவனால் பாராட்டப் பெற்ற தொகுதிகள் இவை.இத்தொகுதிகள் ஆய்வுக் கடல். அனைவரும் இத்தொகுதியில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

  • நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192).பத்திரிகையில் தொடராக எழுதிய 39 கட்டுரையின் தொகுப்பு தான் இந்த நூல். உலக இலக்கியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு அவை கட்டுரையாக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர் அப்துல்காதர் பேச்சாளர் என்பதால் அவரையும் அறியாமல் எழுத்து நடையை விட பேச்சு நடை கைகொடுத்திருப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தலைப்புகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.அன்பே! அந்தக் கொசுவினைச்சாகடித்து விடாதே! அந்தக் கொசுமுதலில்உன்னைக் கடித்தது!

  • வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).பிரபல நாளேட்டில் நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரான இந்தப் பேராசிரியரின் சொல்லாற்றல் நாம் அறிந்தது தான். ஆனால், எழுத்தாற்றலை இந்த நூல் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். 24 கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர் தொடங்கி அம்ருதாபிரீதம் வரை, மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாறுவதைப் பற்றிய ஒரு வழி அனுப்பு உபசாரக் கட்டுரையில் ஆரம்பித்து வரி கட்டுவது சுமையா, சுகமா என்ற கேள்வியை எழுப்பி, விழிப்புணர்வு பிரசாரக் கட்டுரை வரை, பலதரப்பட்ட விஷயங்களை சுவைபட ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் உள்ளவைகளை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் நமக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை ஆசிரியர் சுவைபட எடுத்துச் சொல்லியிருப்பதை உணர முடிகிறது. பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகம்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • அமராவதி பதிப்பகம், 59, ஆடம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 72).வேடர்கள் குலத்தில் உதித்து தங்கள் உறுதியான பக்தி நெறியால் பெரும் சாதனை படைத்த பன்னிருவரது வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் ஜாதி வேறுபாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் நூல்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • க.தி. அருள்மன்றம், வகுளமாலிகா, மாருதிநகர், மதுராந்தகம்-603306. (பக்கம்: 148)பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக உள்ள இந்நூலில், ராமாயணம் குறித்து பெரும்பாலான கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையின் தலைப்பே, நூலின் பெயராக விளங்குகிறது. பேச்சாற்றல் மிக்க இந்நூலாசிரியர், தம் எழுத்தாற்றலையும் இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.கும்பகர்ணன் உறங்கவில்லை என்ற முதல் கட்டுரையில் "ஆசில் பரதாரம்' என்று தொடங்கும் கம்பரின் பாடலை நன்கு விளக்கியுள்ளதும் (பக்.2), கும்பகர்ணன், வீடணன் இருவரும் முறையே வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவர்கள் என்று ஒப்பிடுவதும் (பக்.4). மூக்கில்லாத தவளும் இடையில்லாதவளும் என்ற கட்டுரையில் கம்பனின் நகைச்சுவையை விளக்குவதும் (பக்.32, 33), இராமபிரானின் சிறப்பை எண்ணி சீதை அழுவதை விளக்குவதும் (பக்.79), நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். படிக்கத்தக்க பயனுள்ள நூல்.

  • தமிழாய்வு மன்றம் எடுத்த இம்முயற்சி அமிழ்தினும் இனிய தமிழைப் பரப்பும் பணியாகும். ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெறுவதையும் வரவேற்கும் செயல் உலகத்தோடு ஒட்ட ஒழுகலைப் படம் பிடிக்கிறது. அதனால் தான் தொல்காப்பியத்துச் செய்யுளியலில் உள்ள "நோக்கு' என்பதற்கு இளம்பூரணர் உரையை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் போலும். திருக்குறள் மூல நூலை சிதைப்பதைச் சாடுகிறார் தமிழண்ணல். அக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக சங்கம் வளர்த்த பெருங்கோமான் பாண்டியத்துரைத் தேவர் பண்பாடு இன்று எல்லாராலும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல். "துவக்கம்' என்ற சொல் சரியல்ல: "தொடக்கம் ' என்பதே இலக்கண வழக்கு என்று வினா -விடையில் தரப்பட்டிருக்கும் தகவல். ஆழமாக தமிழைக் கற்றுத் தெளிய விரும்பும் ஆர்வலர் அனைவரும் விரும்பி இந்த இதழைச் சுவைப்பர் என்பது நிச்சயம்.

  • வள்ளி சுந்தர் பதிப்பகம், எண்.84/14, மீர்பக்சிஅலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 152). "கருவறையின் அதிர்வுகள்' துவங்கி, "இணைய வெளிப்பந்தலில்' ஈறாக சுமார் 16 இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம். "மனித உடலின் வலப்பக்கம், இடப்பக்கம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அதை அந்த உடலின் ஊனம் என்றே கருதுகிறோம். அதுபோல சமுதாயத்தில் "ஆணும் பெண்ணும்' என்று "வெளிச்சத்துக்கு வராத வேதனைக் காட்சி'களைக் கண் முன் நிறுத்தும் இக்கட்டுரையாசிரியரின் "மும்பையில் தமிழ் இலக்கியம்,' "விழி தேடும் விடியல்கள்,' "தீக்குள் விரலை வைத்தால்' போன்ற விமர்சனக் கட்டுரைகள் இலக்கியங்கள் மீதும் அதையும் விஞ்சி சமுதாயத்தின் மீதும் அவர் கொண்டுள்ள நேயம் பற்றி பறை சாற்றுகின்றன. "புதிய மாதவி, அரபிக் கடலோரப் புயல்... அது காயப்படுத்தாது, நியாயப்படுத்தும், அவரது கோபமும் நியாயமானது தான்' என்ற மாலன் கூற்றில் உள்ள உண்மை இந்நூலை வாசிப்பவர்களுக்கு புலப்படும்.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 136).அணில் கடித்த பழங்கள், மரபின் மைந்தன் முத்தையா கட்டுரையும், பஞ்சவடியின் நிழலில்... எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும், தென்காசியில் நடைபெற்ற டி.கே.சி., விழாவின் சிறப்பை விவரிக்கிறது. நாமும் விழாவில் கலந்து கொண்ட உணர்வு டி.கே.சி.,யின் சிவலிங்கம் இருந்த குறிப்பேட்டில் சைவ இலக்கியப் பாடல்களையும் சங்கு முத்திரை கொண்ட பக்கத்தில் வைணவ இலக்கியப் பாடல்களையும் காண முடிகிறது. அவர் சுவைத்த 116 பாடல்கள் நூலில் இடம் பெற்றுள்ளது. நாமும் சுவைத்து மகிழலாம்.

  • வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். (பக்கம்: 112). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இக்காலத்தில் இன்றியமையாதது. இதை 13 கட்டுரைகளாக இந்நூலில் காணலாம்.இயற்கையை காத்தல், கடலோடிகள், பாரம்பரிய தகவல்கள், கடல்சார் குறிப்புகள், கடல் பற்றிய மரபுவழி அறிவு, மீன் பிடிக்கும் முறைகள், முத்துக் குளித்தல், மீனவர் பெற வேண்டிய வளம் என ஆய்வு செய்து சொற்பொழிவாக நிகழ்த்திய கட்டுரைகள் கையடக்கப் பிரதியாக வந்துள்ளது.மீன்களின் விற்பனை, பதப்படுத்தும் முறைகள், இவை சார்ந்த பிரச்னைகள் என எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் அழகு வெகு அருமை! சிறு நூலில் சிறந்த தகவல்கள்.

  • வெளியிட்டோர் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் அஞ்சல் பெட்டி எண்.8780, அடையார், சென்னை-600 020. மரபியல் வழி வந்த பண்பாட்டுப் பொருள்களைச் சீர் செய்தல், பாதுகாத்தல் ஆகியன மிக நுணுக்கமான பணிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியா போன்ற தொன்மையான நாடுகளில் அகழ்ந்தெடுக்கப்படும் பண்பாட்டுப் பொருள்கள் மற்றும் மரபியல் சார்ந்த தொன்மையான பொருள்களைப் பற்றிய ஆய்வு வேண்டப்படுவதாகும். இவற்றின் மூலமாக அறியப்படும் வரலாறு, பொருளியல், கலை நுணுக்கம், தொழில் நுணுக்கங்கள் ஆகிய பண்பாட்டுக் கூறுகள் சிறப்பானவை. இப்பொருட்களைச் சீரமைத்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றை முறையாகக் காட்சியில் அமைத்து காப்பு செய்தல் பண்பாட்டு ஆய்வாளர்கள் இடையேயும், அறிவியல் அறிஞர்களிடையேயும் முக்கியம் வாய்ந்த பயனீட்டுக் கல்வியாக மலர்ந்துள்ளது. இவ்வகையில், என்.ஹரிநாராயணா அவர்களின் இந்நூல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது கண்கூடு. இந்நூலை ஆக்கித் தந்தமைக்கு அவரையும், வெளியீட்டாளரையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்ட இந்நூலில், 46 ஆய்வுக் கட்டுரைகள் சுவையான ஆங்கிலத்தில் உள்ளன. அருங்காட்சியியல் பற்றிய அனைத்துச் செய்திகளும் முறையாகத் தரப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்களை அமைக்கும் முறைகள், அமைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பன்னாடுகளில் அருங்காட்சியியலில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகிய பல பொருள்கள் பற்றிய முக்கிய செய்திகள் நிறைவாகத் தரப்பட்டுள்ளன.பண்பாட்டுப் பொருள்களைச் சீரமைத்தலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வேதியியல் முறையில் சீரமைத்தல் தனிப் பிரிவாகும். வேதியியல் மேலறிவும், ஆர்வமும், பழம் பொருள் களின் தன்மை சிதைபடா வண்ணம் பாதுகாக்கும் எண்ணமும் முக்கியத் தேவைகள். சீரமைத்தலின் நுணுக்கங்கள் பற்றி விளக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் உள்ளன. பண்பாட்டுப் பொருள்கள் சீரமைத்தலின் வரலாற்று ஆய்வும் இந்நூலில் உண்டு. சீரமைத்தலின் நோக்கங்கள், தேவைகள், சீரமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சி பற்றியும் இந்நூல் விளக்குகிறது. அருங்காட்சியக வேதியியல் அலுவலர்களின் தகுதிகள், முக்கிய பண்புகள், கடமைகள் ஆகிய விவரங்கள் மிகச் சிறந்த பயனளிக்கும். தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய துறை ஆய்வாளர் களுக்கும் வேதி யியல் சீரமைப்பு முறைகள் நன்கு தெரிய வேண்டும் என்று அறிவுறுத்துவது பாராட்டத் தக்கது.தானே முன்னின்று சீரமைத்த பணிகள் பலவற்றை விளக்கி யுள்ளது இந்நூலின் மற்றுமொரு முக்கிய சிறப்பாகும். தஞ்சாவூர் கோவில் பண்டைய ஓவியங் கள், மரச் சிற்பங்கள், பனை ஓலைச் சுவடிகள், செப்புப் படிமங்கள், காகிதப் பொருள்கள் மற்றும் ஓவியங்கள் ஆகிய தொன்மைப் பொருள்களைச் சீரமைத்த முறைகளை விளக்கியுள்ளது மிக்க பயனுள்ளதாகும். இத்துறையைச் சார்ந்த பலருக்கும் இம்முறைகள் பற்றிய தெளிவான அணுகுமுறைகளை இந்நூல் தந்துள்ளது. பழங்காலக் கோவில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை வேதியியல் முறைப்படி சீரமைத்தலும் பாதுகாத்தலும் நிரல்பட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டியில் கிடைத்த ஈயக்காசு களைச் சீரமைத்து காப்பு செய்யப்பட்ட முறையும் சொல்லப்பட்டுள்ளது. சீரமைப்புக்கு தேவையான முக்கிய வேதியியல் பொருள்களின் பட்டியல், அளவுகள் ஆகியன தந்துள்ளமை, இப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக் கும் ஏனைய பொது மக்களுக்கும் மிகத் துணை புரியும்.அருங்காட்சியியல் மற்றும் வேதியியல் சீரமைப்பு, காப்பியல் ஆகிய துறைகளில் பணியாற்றுவோரிடையே மிகவும் நன்கு அறிமுகமானவர் ஹரிநாராயணா. சிறந்த பயிற்சிகளைப் பெற்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், தொன்மையானதுமான சென்னை அருங்காட்சியகத்தில் 30 ஆண்டுகளுக்கு

புதிய வெளியீடுகள்